குஜராத் விமான விபத்து! பிரிட்டன், போர்ச்சுகல், கனடா அமைச்சர்களுடன் மத்திய அமைச்ச...
Train: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்; IRCTC கொண்டுவந்த புதிய விதிமுறைகள் என்னென்ன?
ரயிலில் அடிக்கடி பயணம் மேற்கொள்வோருக்கும், அவசரத்திற்கு பயணம் மேற்கொள்வோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தட்கல் முன்பதிவில் சமீப காலமாக ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளன.
ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்போர், சர்வர் முடக்கம், தொழில்நுட்பக் கோளாறு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வதாகவும், ஏஜன்ட்டுகளின் ஆதிக்கம் காரணமாக பல மடங்கு பணம் கொடுத்து, அவசரத்துக்கு, மக்கள் டிக்கெட் வாங்குகின்றனர்.

தட்கல் டிக்கெட்டுகளை வாங்குவதறக்காக ஏராளமான போலி கணக்குகளைத் தொடங்கி ஏஜன்ட்டுகள் டிக்கெட் வாங்குவதும் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 3.5 கோடி போலி கணக்குகளை ஐ.ஆர்.சி.டி.சி. முடக்கி உள்ளது.
இதுபோன்ற சிரமங்களை களையும் பொருட்டு,வருகிற ஜூலை 1 முதல் ஆதார் அடிப்படையில், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வருவதாக ரயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதனடிப்படையில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் பயன்பெற ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், ஆதார் எண்ணை பயனர் இணைக்க வேண்டும். தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தில், அந்த பயனருக்கு, மற்ற பயனர்களை காட்டிலும், 10 நிமிடங்கள் முன்னுரிமை கொடுக்கப்படும். இந்த நேரத்தில், ஏஜன்ட்டுகளால் கூட தட்கல் டிக்கெட் எடுக்க முடியாது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "வரும் ஜூலை 1 -ம் தேதி முதல் தட்கல் திட்டம் மூலம் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மற்றும் செயலியில் ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்ட நபர்களே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
அதேபோல் வரும் ஜூலை 15 முதல் கவுன்டர்களில் பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் அடிப்படையிலான ஓடிபி சரிபார்ப்பு (aadhar based OTP authentication) மேற்கொள்ள வேண்டும்.

ரயில்வே கவுன்டர்களில் அல்லது ஏஜன்ட்டுகள் மூலமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிப்பவரின் ஆதார் சரிபார்ப்பு அவசியம். பயணம் செய்பவரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது இமெயில் முகவரிக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்த பிறகே தட்கல் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் ஏஜன்ட்டுகளுக்கு தட்கல் முன்பதிவு நேரத்தில் 30 நிமிடங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஏசி பெட்டிகளுக்கு காலை 10 மணி முதல் முதல் 10: 30 மணி வரையிலும் ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு காலை 11:00 மணி முதல் 11: 30 மணி வரையிலும் ஏஜன்ட்டுகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. தட்கல் சேவை மக்களுக்கு முழுமையாக சென்று சேர இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.