குளிர்சாதனங்களை பயன்படுத்த விரைவில் புதிய கட்டுப்பாடு: மத்திய அமைச்சர் மனோகர் ல...
நம்பமுடியாத யதார்த்தம், ஒரு டிகிரியை எட்டிய குளிர்! - திசையெல்லாம் பனி- 3
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பைக் பயணத்தின் முதல் நாள். நாங்கள் தங்கியிருந்த ஓட்டலிலேயே காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவருந்திக் கொண்டிருக்கும் போது சஷாங்க் வந்தார். நாம் சரியாகப் பதினொரு மணியளவில் புறப்பட வேண்டும். எதையாவது மறந்திருந்தால், இங்கேயே வாங்கிக்கொள்ளுங்கள். அடுத்தது நாம் லே நகரைச் சென்றடையும் வரை, எந்தக் கடை வீதிகளும் இருக்கப்போவதில்லை.

முக்கியமாக பைக் ஓட்டப்போகிறவர்கள் கையுறைகளை இரண்டு மூன்று ஜோடிகள் வைத்துக்கொள்ளுங்கள். அவை கனமானதாகவும், நீர் புகாததாகவும் இருத்தல் அவசியம். நீங்கள் வண்டி ஓட்டும் போது, அதிகமான எதிர் காற்று உங்கள் கைகளில் தான் படும். மெலிதான கையுறைகள் குளிர் தாங்காது. உங்களின் வேகத்தைக் குறைக்கும். அடுத்தது, தலைக்கவசம் அணிவதற்கு முன்பு தலையை முழுவதுமாக மூடும் பாலக்லவாவை போடுவதும் அவசியம். காதுக்குள் எதிர்காற்று படுவதும் எளிதில் உடல்நலக் குறைபாட்டை உண்டாக்கும்.
உங்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் ரெயின்கோட், மருந்துகள், தண்ணீர் பாட்டில், போன்றவற்றை மட்டும் ஒரு பையில் போட்டு, அதை உங்களுடன் எடுத்துக்கொள்ளுங்கள். அது தான் உங்களுடைய டே பேக் (day bag) . உங்களுடைய மற்ற பைகள் பின்னால் வேனில் வரும்.
முதல் நாள் என்பதால், இன்றைக்கு ஒரு பரிசோதனை ஓட்டம் போல் தான் இருக்கப்போகிறது. உங்கள் அனைவரது இயல்பும் எனக்குப் புரிய இன்றைய நாள் நல்ல சந்தர்ப்பம். அதிகத் தூரம் இல்லை. எண்பது கிலோமீட்டர்கள் தான் பயணிக்கப் போகிறோம். முதலில் இங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பங்கில், பைக்குகளில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு, அடல் டனல் வழியாக ஜிஸ்பா செல்லப் போகிறோம்.

இன்றைக்கு நாம் செல்லப் போகும் இடத்திற்கு இரண்டு லேயர் ஆடைகள் அணிந்தால் போதுமானது. உங்கள் பைகளைக் கொண்டு வந்து வேனில் வைத்துவிடுங்கள் எனச் சொல்லிவிட்டு, அவருடைய அறைக்குச் சென்றார்.
புறப்படுவதற்கு முன்பு எங்களைப் பக்கத்தில் இருந்த புல்வெளி தோட்டத்திற்கு அழைத்த பார்த், எங்களுக்குச் சில வார்ம் அப் பயிற்சிகளைச் சொல்லிக்கொடுத்தார். அது முடிந்ததும் பைக்கில் செல்லும் போது கவனக் குவிப்பை அதிகரிப்பதற்காகச் சில விளையாட்டுகள் திட்டமிடபட்டிருந்தன. அவற்றை முடித்துவிட்டு, நாங்கள் தயாரானோம்.
ஒவ்வொருவருக்கும் பாதுகாப்புக் கவசங்கள் கொடுக்கப்பட்டன. தலைக்கு ஹெல்மெட், கைகளுக்கும் கால்களுக்கும் ஆர்ம் பேட், knee பேட் போட்டுக்கொண்டு, இறுதியாக ரைடிங் ஜாக்டையும் அணிந்துகொண்டோம். இவற்றைப் போடாமல் யாரும் எப்போதும் பைக் எடுக்கவே கூடாது என சஷாங்க் அறிவுறுத்தியிருந்தார். நாங்கள் பயணிக்கப் போகும் ஹிமாலயன் பைக், 450 சிசி வகை என்ஜின் கொண்டது. மலைப் பிரதேசப் பிரயாணப் பிரியர்களுக்குச் செல்லக் குழந்தை போன்றது.

அரை சாவிகளை வரவேற்பறையில் கொடுத்து விட்டு, நாங்கள் வெளியே வரும்போது, பைக்குகளை கிளம்புவதற்கு ஏற்றவாறு வரிசையாக நிறுத்தி வைத்துக்கொண்டிருந்தனர். அந்தப் பணி முடிந்ததும் மீண்டும் அணியினரிடம் பேசிய சஷாங்க், நாம் குழுவாகப் பயணிக்கப் போகிறோம். இதில் நான் முதலில் செல்வேன் என்னைப் பின்தொடர்ந்து நீங்கள் வரிசையாக வரவேண்டும். கடைசியில் பார்த் வருவார். சிலசமயங்களில், அவர் முதலில் செல்வார், நான் கடைசியில் பின்தொடர்வேன். எப்படி இருந்தாலும் நாங்கள் முதலிலும் கடைசியிலும் இருப்போம் என்பதால், யாரும் வழி மாறி செல்லும் வாய்ப்பு இருக்காது. குழப்பங்கள் வராது.

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், உங்களின் பின் வருபவர், பைக் கண்ணாடியில் தெரிகிறாரா என்பதை உறுதி செய்துகொள்வது தான். நாம் பயணிக்கும் போது நான் உங்களுக்குச் சில சமிக்ஞைகளைக் கொடுப்பேன். சாலைகள் மோசமாக இருந்தாலோ, எதிரில் வாகனம் வரும் போது வேகத்தைக் குறைப்பதற்கு, குழி பள்ளம், வாட்டர் கிராஸ்ஸிங் என ஒவ்வொன்றுக்கும் ஒரு செய்கை உள்ளது. அதை என்னைப் பார்த்து என் பின்னால் வருபவர் செய்வார், அதைப் பார்த்து அடுத்தவர் என அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
பைக்குகள் சீரான இடைவெளி விட்டு வர வேண்டும். முக்கியமாக ஒருவரை ஒருவர் முந்தக் கூடாது. A good rider is one who gets back home safe. பைக் பயணத்தை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம், பாதுகாப்பாக வீடு திரும்புவது தான் உண்மையான வெற்றி.
இனியும் நான் பேசிக் கொண்டிருந்தால், என்னைக் கட்டிப்போட்டு விட்டு நீங்கள் கிளம்பும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே புறப்படலாம் என்றார்.
குழுவிலுள்ள அனைவரிடத்திலும் அவரவர்களுக்கான பைக் சாவி கொடுக்கப் பட்டது. பைக் பதிவு எண், மற்ற அடையாளங்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு பைக்கில் அமர்ந்தோம். அதுவரை இல்லாத பரபரப்பு எங்களுடைய பைக்கின் அருகில் சென்றதும் தொற்றிக்கொண்டது. நவீனிடம், எல்லாம் சரிதானே எனக் கேட்டேன். இலேசான தலையசைப்பு மட்டும் பதிலாக வந்தது. ஆல் தி பெஸ்ட் எனத் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு நானும் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்தேன்.
தயாராக நிற்கும் படைகளைப் பார்வையிடும் தளபதியைப் போல சஷாங்க் ஒரு முறை எல்லா வண்டிகளையும் பார்த்தார். பின் ஒவ்வொரு பைக்கின் அருகில் சென்று அனைவரையும் வாழ்த்தி, பிஸ்ட் பம்ப் (fist bump) கொடுத்துவிட்டு, ஒருங்கிணைப்புக் குழுவுடன் ஏற்பாடுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

விடுதியின் வாயிலில் ஆயத்தமாக அணிவகுத்து நின்றோம். அவர் எங்களைச் சரிபார்த்துவிட்டு அவரது பைக்கில் சென்று அமர்ந்தது, எங்களை உற்சாகமூட்டும் முழக்கங்களைச் சொல்லிக் கொண்டே முன் நகர்ந்தார். நாங்கள் அனைவரும் பைக் என்ஜினை இயக்கி, ‘வர்ர்ரூம் வர்ர்ரூம்…. ’ என்று ஒலியெழுப்பி ஆரவாரமாகக் கிளம்பினோம்.
பைக்குகளின் ‘வர்ர்ரூம்…. ’ உறுமலுடன் என்னுடைய இதயத் துடிப்பின் சத்தம் போட்டிப்போட்டுக்கொண்டிருந்தது. அது பயமா, உற்சாகமா என்றெல்லாம் புரிவதற்குள் நவீன் பைக்கை முறுக்கிக் கொண்டு முன்செல்ல தொடங்கியிருந்தார். சஷாங்க் முதலில் செல்ல, நாங்கள் வரிசையில் நான்காவதாகச் சென்று கொண்டிருந்தோம்.
தமிழ்நாட்டில் பைக் குழுக்கள் பயணிப்பதை எத்தனையோ முறை பார்த்துள்ளேன். முதல் முறையாக நானே அக்குழுவில் இருப்பதும், முன்னும் பின்னுமாக பைக்குகள் சூழ பயணிப்பதும், நம்பமுடியாத யதார்த்தமாக இருந்தது. எகிறியிருந்த என்னுடைய அட்ரினலின் அளவு சற்று குறையவே முதல் பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஆயின. அதற்குள் எரிபொருள் நிரப்பும் இடமும் வந்தது.
மொத்தப் பயணத்திலேயே எரிபொருள் நிரப்புவது தான் நேரம் பிடிக்கும் வேலை. அனைத்து வண்டிகளுக்கும் பெட்ரோல் போட்டு முடிப்பதற்கு இருபது நிமிடங்களுக்கு மேலானது. அங்கிருந்து ஆடல் சுரங்கப்பாதை நோக்கி எங்களது பயணம் தொடங்கியது.

அடல் டனல் - பத்தாயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கும் சுரங்கப்பாதை. ஒன்பது கிலோமீட்டர்கள் நீளமுள்ள இந்தச் சுரங்கப்பாதை மணாலி - லே பயணத் தொலைவை நாற்பத்து ஆறு கிலோமீட்டர்களுக்குக் குறைக்கும். 2020 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் இருக்கிறது.
இந்தப் பாதை அமைக்கப்படுவதற்கு முன்பு ரோதங் பாஸ் வழியாகத் தான் பயணிகள் செல்வார்கள். வருடத்தின் ஆறு மாதங்கள் பணி மூடி கிடக்கும் பாதை ரோதாங் கணவாய். பொது மக்கள் மட்டுமின்றி, லே போன்ற நகரங்களிலிருந்து ராணுவ வாகனப் போக்குவரத்தும் அதனால் பெருமளவில் பாதிக்கப் பட்டது. இந்த ஆடல் சுரங்கப்பாதை வருடம் முழுவதும் தடையின்றி இயங்கும் வகையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.

ஆடல் சுரங்கப்பாதையைத் தாண்டியதும், இரும்பு பாலம் ஒன்றைக் கடக்க வேண்டியிருந்தது, சஷாங்கிற்கு அது தான் உண்மையில் பயணம் தொடங்கும் இடமாக இருக்கவேண்டும்.
இந்திப் பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டே நின்றவாறு பைக்கை செலுத்த ஆரம்பித்தார். சற்றே தலைதாழ்த்தி சாலையை வணங்கியவாறு பாலத்தைக் கடந்தார். அதைப் பார்த்த மற்றவர்களும் அவ்வாறே செய்தனர். மாலையில் ஜிஸ்பாவில் தேநீரும் பகோடாவுமாக அரட்டை கச்சேரி தொடங்கியபோது சஷாங்கிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அவர் வெளிப்படுத்திய உற்சாகம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டதையும், நாங்கள் எவ்வாறு உணர்ந்தோம் என்பதையும் பேசிக்கொண்டிருந்தோம்.

மணாலி - லே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜிஸ்பா, ஒரு சிறிய கிராமம். பாகா நதிக்கரை ஓரத்தில் அமைத்திருந்தது எங்களின் கேம்ப் சைட்.
சுற்றிலும் மலைகள், நதிக்கரையின் பக்கத்தில் தான் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த கூடாரம் இருந்தது. அது சுவிஸ் டென்ட்ஸ் வகைக் கூடாரம். இந்த வகைக் கூடாரங்கள் நல்ல இட வசதியுடன், தனிக் கழிவறை வசதியும் கொண்டதாகும். பொதுவாக இப்படிப் பட்ட பயணங்களில் கேம்ப் செய்வதென்றால், பொதுக் கழிப்பறைகள் தான் இருக்கும். ஆனால் இங்கு இந்த வசதி இருந்தது சற்றே நிம்மதியைத் தந்தது.
நதிக்கரையை ஒட்டிய முதல் கூடாரத்தை நானும் நவீனும் தேர்ந்தெடுத்தோம். ஐந்து மணி அளவிலேயே தங்குமிடத்தை அடைந்து விட்டப்படியால் குழுவினருடன் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது.
மலை காற்று முகத்தில் பட்டது. நதியின் சலசலப்பு கேட்டுக்கொண்டே இருந்தது. நெடு நேரம் நாங்கள் இதையெல்லாம் ரசித்துக் கொண்டிருப்பதைக் கவனித்த சஷாங்க், அருகே வந்து, இடம் ரம்மியமாக இருக்கிறதா, இப்போதே நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள், இனிமேல் உங்கள் கண்களுக்குப் பச்சையே தென்படப்போவதில்லை. எனச் சொல்லி உரக்கச் சிரித்தார். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் எனக் கேட்டேன், இதற்கு அடுத்தது காஷ்மீரில் தான் செடி கொடி தாவரங்கள் தென்படும், போகப் போக உங்களுக்கே புரியும் என்றார்.

அணியினருடன் பேசிக்கொண்டு, இயன்றவரை அனைத்துக் கோணங்களிலும் புகைப்படம் எடுத்துவிட்டு, குளிர் கிட்டத்தட்ட ஒரு டிகிரியை எட்ட ஆரம்பித்தபோது நாங்கள் அனைவரும் எங்களின் கூடாரத்திற்குள் சென்றுவிட்டோம். அன்றைய நாளின் அனுபவத்தை எழுதுவதற்காக டைரியை எடுத்து வைத்திருந்தேன். ஆனால் என்னால் எழுத முடியவில்லை. அசௌகரியம்.
இலேசாகத் தலைவலித்தது. அப்போதே என் சிந்தனையின் அடியாழத்தில் பயம் தோன்றியது. ஒரு வேளை இது…. உடனே… நானே என்னைத் தேற்றிக்கொண்டு அப்படியெல்லாம் இருக்காது. இப்போது தானே பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம் எனச் சமாதானம் செய்துகொண்டேன். அடுத்த பத்தே நிமிடங்களில் தலைவலி பல மடங்கு மோசமாகியிருந்தது. இப்போது தலைச் சுற்றலும் தொடங்கியிருந்தது.
(தொடரும்)
- ராஜ்ஸ்ரீ செல்வராஜ்
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.