பைக் இல்லையா..? அப்போ வரதட்சிணையாக சிறுநீரகம் வேண்டும்..! மருமகளை அதிர்ச்சியடைய வைத்த மாமியார்!
பிகாரில் வரதட்சிணையாக மருமகளி்ன் சிறுநீரகத்தை கேட்டு மாமியார் ஒருவர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார்.
பைக், நகை தரமுடியாதா? அப்போது உன்னுடைய சிறுநீரகத்தை வரதட்சிணையாக கொடுக்க வேண்டும் என மாமியார் ஒருவர் கேட்டிருக்கிறார். இது நம்பமுடியாததாக இருக்கலாம். ஆனால்..
ஆம், வடக்கு பிகாரில் உள்ள முஸாபர்பூரில், தனது மகனுக்கு வரதட்சிணையாக சிறுநீரகத்தைக் கேட்டவர் மற்றும் அவரது உறவினர்கள் நடத்திய வினோதமான சம்பவம் அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இது தொடர்பாக தீப்தி என்ற பெண் முஸாபர்பூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து தனக்கு நேர்ந்த கொடுமையை தீப்தி காவல் துறையினரிடம் கூறுகையில், “எனக்கு 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது மாமியாரின் வீடு முஸாபர்பூரில் இருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு ஆரம்பத்தில் எல்லாம் சுமுகமாகத்தான் நடந்து வந்தது.
பின்னர் என்னுடைய மாமியார் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாக்கினர். எனது பெற்றோர் வீட்டிலிருந்து ஒரு பைக் மற்றும் பணத்தை கொண்டு வரச் சொல்லியும் மிரட்டினர்.
எனது திருமணமான இரண்டு வருடங்களுக்குப் பிறகு, என்னுடைய கணவரின் சிறுநீரகக் கோளாறு பற்றி எனக்குத் தெரியவந்தது. அதனால், நகை, பைக் எதுவும் கொடுக்க முடியவில்லை என்றால், உன்னுடைய சிறுநீரகத்தைக் கொடுக்க வேண்டும் என எனது மாமியார் தொடர்ந்து மிரட்டினார். நான் தாக்கப்பட்டு, என் மாமியார் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டேன்.
நான் பின்னர் என் பெற்றோரின் வீட்டிற்குச் சென்று மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்” என்றார் தீப்தி.
இரு தரப்பினருக்கும் இடையே காவல்துறையினர் சமாதானம் செய்ய முயன்றனர், ஆனால், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற வேண்டும் என்றும் தீப்தி கோரிக்கை வைத்தார். ஆனால், அவரது கணவர் அதற்கு உடன்படவில்லை.
பின்னர், மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரது கணவர் உள்பட அவரது மாமியார் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தேனிலவு வழக்கு: கொலைக் குற்றவாளியை கன்னத்தில் அறைந்த விமானப் பயணியால் பரபரப்பு!