சென்செக்ஸ் 573.38 புள்ளிகளுடனும், நிஃப்டி 169.60 புள்ளிகளுடன் சரிந்து முடிவு!
விமானம் எப்படி விபத்துக்குள்ளாகி இருக்கும்? விவரிக்கும் முன்னாள் விமானி!
ஆமதாபாத் விமான விபத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்னாள் விமானி எஹ்சான் காலித் விவரித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 242 பேர் பயணித்த நிலையில், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விமானம் விபத்துக்குள்ளான சாத்தியக்கூறுகள் குறித்து நொய்டாவைச் சேர்ந்த முன்னாள் விமானி எஹ்சான் காலித் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் விவரித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“விமானத் தரவுப் பதிவு, காக்பிட் குரல் பதிவு உள்ளிட்டவரியில் என்ன நடந்திருக்கும் என்பது சரியாகச் சொல்லும். விமானம் பறக்கும்போதே விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகியுள்ளது.
நடுவானில் வெடிப்பு ஏதும் ஏற்படவில்லை. விமானம் மின் இணைப்பை சந்தித்திருக்கிறது. மின் இழப்பு என்ஜின் கோளாறால் இருக்கலாம். ஆனால், இரண்டு என்ஜினும் ஒரே நேரத்தில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை.
அந்த விமானத்தின் இரண்டு என்ஜின்களும் மிகப்பெரியது. பறவை மோதியதால் கோளாறு ஏற்பட்டு, இரு என்ஜின்களிலும் மின் இழப்பு ஏற்படுவது மிகவும் அரிது.
விமானி மே டே விடுத்துள்ளார். இதன்பொருள், காக்பிட்டில் கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. அந்த கோளாறுடன் போராடும்போதுதான் விமானம் தள்ளாடிக் கொண்டே பறந்துள்ளது.
ஆணால், லேண்டிங் கியரை ஏன் உயர்த்தவில்லை எனப் புரியவில்லை. விமானம் பறக்கத் தொடங்கியவுடன் லேண்டிங் கியர் உயர்த்தப்பட வேண்டும். மேலே உயர்த்த முடியவில்லை என்றால், தொழில்நுட்பக் கோளாறு தெரிந்திருக்கும்.
விமானம் 600 அடிக்கு மேல் பறந்துகொண்டிருந்தது. லேண்டிங் கியர் உயர்த்தப்படாததுதான் மிகப்பெரிய கேள்வி. அதுதான் பிரச்னையா? அல்லது பல பிரச்னைகளை விமானிகள் சந்தித்தனரா? என்பது யாராலும் தற்போதைக்கு சொல்ல முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.