ஒரு நாள்தான்... அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள்: விமானப் பணிப்பெண் தாய்
என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன்: ராமதாஸ்
என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தைலாபுரம் தோட்டத்திலுள்ள இல்லத்தில் வியாழக்கிழமை ( ஜூன் 12) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அன்புமணிக்கு தலைவர் பதவியைக் கொடுப்பதாகக் கூறினேன். ஆனால், நடப்பவற்றை பார்க்கும்போது, அன்புமணியின்செயல்களைப் பார்க்கும் போது என் மூச்சுக்காற்று நிற்கும் வரை அவரிடம் தலைவர் பதவியைக் கொடுக்க மாட்டேன்.
நான் (ராமதாஸ்) ஒரு நல்ல தந்தையாக, வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். ஆனால் மாநாட்டுக்குப் பிறகு நடைபெறுகின்ற செயல்களைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நான் தலைவர் பதவியைக் கொடுக்கிறேன் எனக் கூறியதற்கு, ஏன் அப்படி கூறினீர்கள் என நூற்றுக்கு 99 சதவீதம் பேர் கேட்கின்றனர். தொண்டர்களின் வார்த்தைக்கு ஏற்ப, விருப்பத்துக்கு ஏற்ப இப்போது நான் கூறுகிறேன். என் மூச்சுக் காற்றும் நிற்கும் வரை அந்த தலைவர் பதவியில் நான் இருப்பேன்.
என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கும் போது நான் கூறினேன். ஆனால், அதை காப்பாற்ற முடியவில்லை. தலித் எழில்மலை, பொன்னுசாமி போன்ற இன்னும் பலருக்கு அமைச்சர் பொறுப்புகளைக் கொடுக்கும் போது, அவர்களின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாத போது அன்புமணிக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்தத் தலைவர்கள் வற்புறுத்தியதன் பேரில் 35 வயதிலேயே அவரை (அன்புமணி) மத்திய கேபினட் அமைச்சராக்கினேன்.
ஆனால் இரண்டரை ஆண்டுகளில் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. நான் வந்துவிடுகிறேன் என அன்புமணி கூறினார். ஆனால் நான் தினம், தினம் எப்படி செயல்பட வேண்டும் என்று பேசி, சமாதானம் செய்த பிறகு செயல்பட்டார். உலக அளவில் பல விருதுகளை வென்றார். ஆனால், அன்புமணியால் தந்தையிடம் விருது வாங்க முடியவில்லை. தந்தையை, தாயை மதிக்க வேண்டும். அப்படி கூறினாலே அன்புமணிக்கு கோபம் வருகிறது.
சித்திரை முழு நிலவு மாநாட்டுக்குப் பிறகு அன்புமணியின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளன. நான் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் எனக் கூறும் போதெல்லாம், நீங்கள் நூறாண்டு வரை வாழ்வீர்கள் என அன்புமணி கூறுவார். ஆனால் என் மார்பிலும், முதுகிலும் ஈட்டியால் அவர் குத்தி வருகிறார். தூக்க மாத்திரைகளைப் போட்டாலும் எனக்கு தூக்கம் வரவில்லை. அன்புமணியை நினைக்காமலும் இருக்க முடியவில்லை. பாசத்தால் அல்ல, பாசமெல்லாம் போய்விட்டது. அன்புமணி செய்யும் ஒவ்வொரு செயலும் அடாத செயலாகும்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, மூத்தோர் சொல், வார்த்தை அமிர்தம். இவையெல்லாம் கூறினால் அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார். இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு நான் செயல் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன். கட்சி நிறுவனர் சொல்லும் வழியில் நடந்து கொள்கிறேன் என்பதுதான். அப்படி நடந்து கொள்வேன் எனக் கூறுவார். ஆனால் வேறு மாதிரி நடந்து கொள்வார் அன்புமணி.
பாமகவின் தொண்டர்களை, கட்சி சொந்தங்களை நினைக்கும் போதெல்லாம் எனக்கு ஏற்படும் பூரிப்பும், ஆனந்தமும் சொல்லி மாளாது. ஆனால் அன்புமணியை நினைக்கும் போதெல்லாம் எனக்கு ஏற்படுகிற அதிர்ச்சி, மனக்குமுறல்கள் எனக்கு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்! ஏன்?
இந்த கட்சியை உருவாக்கிய என்னை ஒலிபெருக்கி வைத்து பேசக்கூடாது, 200 பேருக்கு மேல் கூட்டம் கூட்டக்கூடாது, அறையில்தான் என்னை சந்திக்க வேண்டும் என கட்டளையிட இவர் யார். கட்சியின் நிறுவனரை இப்படி சொல்லும் அதிகாரம் நான் கொடுக்கவில்லையே. என் மூச்சுக் காற்றும் நிற்கும் வரை பாமகவுக்கு நான் தலைவர், நிறுவனர்.
பாட்டாளி இளைஞர் சங்கத்தலைவர் பதவிக்கு பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படுவார். மேலும் காலியாகவுள்ள பல பொறுப்புகளும் நிரப்பப்படும். கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் முறையாகக் கூட்டப்படும். என்னை பார்க்க யார் வேண்டுமானாலும் வரலாம். முன் அனுமதி தேவையில்லை என்றார் ராமதாஸ்.