மும்பை டு கோவா: இனி ரயிலில் கார்களை ஏற்றிச் செல்லாம்! கொங்கன் ரயில்வே சொல்லும் புதிய திட்டம் என்ன?
தற்போது மகாராஷ்டிராவின் கொங்கன் ரயில்வேயில் சரக்குகளை ஏற்றிய லாரிகள் ரயில்களில் ஏற்றப்பட்டு மங்களூரு வரை கொண்டு செல்லப்படுகின்றன.
மும்பை அருகில் உள்ள கொலாட் என்ற இடத்திலிருந்து ரயிலில் லாரிகள் ஏற்றப்படுகின்றன. லாரியில் அதன் டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் தங்கிக்கொள்ளலாம். அதிலேயே சமையல் செய்தும் சாப்பிட்டுக்கொள்ளலாம்.
இத்திட்டத்திற்கு லாரி உரிமையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பல ஆண்டுகளாக இத்திட்டம் பயன்பாட்டில் இருக்கிறது.

இதன் மூலம் சரக்குகளை லாரியில் விரைவாக எடுத்துச்செல்ல முடிகிறது. அடுத்த கட்டமாக ரயிலில் கார்களை எடுத்துச்செல்லும் திட்டத்தைக் கொங்கன் ரயில்வே அமல்படுத்த இருக்கிறது.
தற்போது கார்களில் கொங்கன் அல்லது கோவாவிற்குச் செல்ல சாலைகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு நடுவழியில் வாகனங்கள் சிக்கிக்கொள்கின்றன.
இதனால் இப்பிரச்னைக்குத் தீர்வு காண மும்பையிலிருந்து கோவா மற்றும் மகாராஷ்டிராவின் சிந்துதுர்க், ரத்னகிரி போன்ற கொங்கன் பகுதியில் இருக்கும் இடங்களுக்கு கார்களை ரயிலில் எடுத்துச்செல்லும் திட்டம் குறித்து மத்திய ரயில்வே பரிசீலித்து வருகிறது.
இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பையிலிருந்து கொங்கன் பகுதிக்கு காரில் செல்லும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது குறித்து கொங்கன் ரயில்வே பொதுமேலாளர் சந்தோஷ் குமார் கூறுகையில், ''நீண்ட நாட்களாக ரயிலில் லாரிகளை எடுத்துச்சென்று கொண்டிருக்கிறோம். டிரைவர்கள் டிக்கெட் எடுத்துக்கொண்டு லாரியில் பயணம் செய்ய முடியும்.

இதே போன்று தனியார் வாகனங்களாக கார்களையும் ரயிலில் எடுத்துச்செல்வது குறித்துப் பரிசீலிப்போம். தற்போதுள்ள ரயில் பெட்டிகள் லாரிகளை எடுத்துச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கார்களை எடுத்துச்செல்லும் விதமாக ரயில் பெட்டியில் மாற்றம் செய்யவேண்டியிருக்கிறது. கார்களை எடுத்துச்செல்லும் திட்டம் விநாயகர் சதுர்த்தியையொட்டி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
ஆனால் காருக்குள் பயணிகளைப் பயணம் செய்ய அனுமதிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை'' என்று தெரிவித்தார்.
தற்போது மும்பையிலிருந்து கார்களை படகுகளில் எடுத்துச்செல்லும் திட்டம் அமலில் இருக்கிறது.