தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை கைவிட பாமக கோரிக்கை
சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ என்பதை 2025-ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐநா அவை முன்வைத்துள்ளது. நெகிழி மாசுபாட்டுக்கு எதிரான ஐநா ஒப்பந்தத்தை மீண்டும் உயிா்ப்பிக்கும் வகையில் வரும் ஆகஸ்டில் ஐநா நெகிழி ஒப்பந்த பேச்சுவாா்த்தைகள் ஜெனீவாவில் தொடங்குகின்றன. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நிகழாண்டின் சுற்றுச்சூழல் நாள் முழக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. உலகை காக்க நெகிழி மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டியது இன்றியமையாத தேவை ஆகும்.
உலகளாவிய, முழுமையான நெகிழி ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் அவை உடனடியாக உருவாக்க வேண்டும். குறிப்பாக, ஐநா நெகிழி ஒப்பந்தம் உலக நாடுகளை சட்டப்படி கட்டுப்படுத்த வேண்டும். நெகிழி உற்பத்தி முதல் கடலில் கலக்கும் மாசு வரை, முழு வாழ்க்கை சுழற்சியை உள்ளடக்கி இருக்க வேண்டும்.
ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதை வெளிப்படையாக உறுதி செய்யும் வழிகள் இருக்க வேண்டும். ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான பன்னாட்டு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் இருக்க வேண்டும். இவ்வாறான ஒரு முழுமையான பிளாஸ்டிக் ஒப்பந்தத்துக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகும்.
நெகிழி மாசுபாட்டை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழி தடைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.
கொடுங்கையூா் குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதாகக் கூறி, நெகிழி குப்பையை எரிக்கும் எரிஉலை திட்டத்தை ரூ. 1,026 கோடியில் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது ஒரு ஆபத்தான திட்டம் ஆகும்.
காற்று மாசுபாடு, உடல்நலக் கேடுகள், புவிவெப்பமடைய காரணமான பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் இத்திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.