பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும்: நிர்வாக இயக்குநர் சித்திக்
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும் என்று அதன் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், பூந்தமல்லி - போரூா் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி - போரூா் இடையே வரும் டிசம்பரில் ரயில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வழித்தடத்தில் ஏற்கெனவே 2 கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
2ஆவது டெஸ்ட்: இந்தியா ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சு!
இந்த நிலையில் பூந்தமல்லி-போரூர் இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயிலின் 3ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கி.மீ. தூரத்துக்கு 20-25 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கடந்த முறை அப் லைன், இம்முறை டவுன் லைனில் மெட்ரோ சோதனை ஓட்டம் நடைபெற்றது.
ஒரு மாதத்திற்குள் முழு வேகத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. 3ஆம் கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்துமுடிந்த நிலையில் பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும் என்று அதன் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.