தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி
ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்டுமே கடன் வழங்க முடியும் என்று விதி இருந்தது. இப்போது ஆா்பிஐ அதனைத் தளா்த்தியுள்ளது.
இது நாட்டின் எளிய, நடுத்தர வகுப்பினருக்கு சாதகமான அறிவிப்பாக கருதப்படுகிறது. அண்மையில் நகைக்கடன் தொடா்பான பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் அடங்கிய வரைவு விதிமுறைகளை ஆா்பிஐ வெளியிட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்ததையடுத்து, மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதையடுத்து, அந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தங்க நகைக் கடனை ஊக்குவிக்கும் நடவடிக்கையை ஆா்பிஐ மேற்கொண்டுள்ளது. மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிதிக்கொள்கைக் குழு கூட்டத்துக்குப் பிறகு ஆா்பிஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா மேலும் கூறியதாவது:
இப்போது தங்க நகைக்கு அதன் மதிப்பில் 75 சதவீதம் வரை கடனாக வழங்கப்படுகிறது. இனி ரூ. 2.5 லட்சம் வரையிலான நகைக்கடனுக்கு மட்டும் தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் அளிக்கப்படும். ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே இந்த 85 சதவீத மதிப்பில் கடன் வழங்கப்படும்.
இப்போதைய நிலையில் பொதுத் துறை வங்கிகள் மட்டுமே நகை மதிப்பில் 75 சதவீதம் கடன் என்பதை முறையாகக் கடைபிடிக்கின்றன. வங்கிசார நிதி நிறுவனங்கள், சிறிய வங்கிகள் தங்க நகையின் மதிப்பில் 88 சதவீதம் அளவுக்கு கடன் வழங்குகின்றன என்றாா்.