தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
உயிர் காக்க உதவிய விமான தாமதம்: ஏக்நாத் ஷிண்டேவின் மனிதாபிமான செயல்!
வடக்கு மகாராஷ்டிரத்திலிருந்து, மாநிலத் தலைநகருக்கு விமானத்தைத் தவறவிட்ட சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யவிருந்த பெண்ணுக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உதவி செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஷிண்டேவின் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்..
துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெள்ளிக்கிழமை ஜல்கானில் உள்ள முக்தைநகரில் முக்தாபாய் பால்கி புறப்பாடு விழாவிற்கு வருகை தந்திருந்தார். மும்பைக்குத் திரும்பும்போது, ஜல்கானில் அவர் செல்லவிருந்த விமானம் சற்று தாமதமானது. அவசரமாகச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படும் ஒரு பெண்ணுக்கு இந்த விமான தாமதம் உயிர் காக்க உதவியது.
ஷீத்தல் போர்டே என்பவர் திட்டமிடப்பட்ட மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்காக மும்பைக்குச் செல்லும் நம்பிக்கையுடன் விமான நிலையத்தை அடைந்தார். ஆனால் அவர் வந்த நேரத்தில், அவர் பயணிக்கவிருந்த விமானம் ஏற்கெனவே புறப்பட்டுவிட்டது. அவர் முக்கியமான அறுவைச் சிகிச்சை செய்யவேண்டி இருந்ததாக விமான நிர்வாகத்திடம் உதவி கோரினார். உடனடியாக மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜனைத் தொடர்பு கொண்டார். அவர் துணை முதல்வர் ஷிண்டேவிடம் உதவி கோரினார்.
நிலைமையைக் கேட்டறிந்ததும், எந்தவித தயக்கமும் இன்றி துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அந்தப் பெண்ணையும், அவரது கணவரையும் மும்பைக்குத் தான் செல்லும் தனி விமானத்தில் அழைத்துச் சென்றார்.
பயணத்தின்போது, அவர் நேரில் அந்த பெண்ணுடன் தொடர்புகொண்டு, அவரது சிகிச்சை குறித்து விவரங்களை விசாரித்தார்.
விமானம் மும்பையில் தரையிறங்கியதும், உடனடியாக சிறப்பு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டதை ஷிண்டே உறுதிசெய்தார் மற்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டார்.
ஷிண்டே தலைமையிலான ஆளும் சிவசேனாவைச் சேர்ந்த ஜல்கானின் பாதுகாவலர் அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல், துணை முதல்வரின் இந்த செயலைப் பாராட்டினார்.
இதனிடையே, தான் சாதாரண மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே.
இந்த சம்பவத்தில் அவரது தலைமை ஒரு உயிரைக் காப்பதற்கு மட்டுமல்லாமல், பொதுச்சேவையின் மதிப்புகளையும், மனிதாபிமான செயலையும் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.