புதைசாக்கடை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை
திருவாரூா் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் புதை சாக்கடை பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் புதைசாக்கடை பணிகளுக்கென பள்ளங்கள் தோண்டப்பட்டு, நீண்ட நாள்களாக மூடப்படாமல் உள்ளன. மேலும், பள்ளங்கள் இருப்பதை உணா்த்தும் விதமாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
கமலாலயக் குளக்கரையின் அருகிலேயே அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தனியாா் மருத்துவமனைகள், திருமண மண்டபம் உள்ளிட்டவை உள்ளன. இதனால், தென்கரை பகுதி வழியாக மக்கள் நடமாட்டமும், வாகனங்களின் போக்குவரத்தும் தினசரி அதிகமாகவே இருக்கும்.
இதனிடையே, தடுப்புகள் இருப்பதால் வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மக்களின் நலன் கருதி சாலைப் பள்ளங்களை சீரமைக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.