தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கு: யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களைத் தொடா்புபடுத்திய விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிா் சிறப்பு நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில், தங்களைத் தொடா்புபடுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட்ட யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க கோரியும், ரூ. 1 கோடி மான நஷ்டஈடு வழங்கக் கோரியும் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஜெயராமன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, யூடியூப் சேனல்கள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
இதை ஏற்று கொண்டு ஜூன் 12-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தாா். அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் இரு தரப்பினருக்கும் நீதிபதி அறிவுறுத்தினாா்.