விமான விபத்து: மருத்துவமனையில் துர்நாற்றம்! உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இதுவரை 265 உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவமனையைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்கள் மற்றும், விமானம் விழுந்த இடத்தில் இருந்த குடியிருப்புகளில் பலியானவர்களின் உடல்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் இதுவரை 265 உடல்கள் வந்திருப்பதாக எங்களுக்குத்தகவல் கிடைத்திருக்கிறது என்று காவல் துணை ஆணையர் கனன் தேசாய் கூறியிருக்கிறார்.
இதில், விமானப் பயணிகள், மேகாநகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் குடியிருப்பு மற்றும் அரசு மருத்துவமனைக் கட்டடங்களுக்கு இடையே விழுந்தததால், அங்கிருந்தவர்களின் உடல்களும் அடங்கும்.
எனவே, உயிரிழந்தவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகளைப் பெற்று டிஎன்ஏ சோதனை நடத்தி முடிக்க குறைந்தது மூன்று நாள்கள் ஆகும் என்றும், அதன்பிறகே உடல்களை ஒப்படைக்கும் பணி தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்தில் சோகத்துடன் காத்திருக்கிறார்கள்.