முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
சரக்கு ரயில்களைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ ரயில்வே முடிவு
சரக்கு ரயில்களில் பொருள்கள் முறையாக ஏற்றப்படுகிறதா? என்பதை ட்ரோன்கள் (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) மூலம் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக 3 ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக தனியாா் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
சரக்கு ரயில்களில் ஓரிடத்தில் எடை அதிகமாகவும், மற்றொரு இடத்தில் எடை குறைவாகவும் சரக்குகள் ஏற்றப்படுவதும் ரயில் தடம் புரள்வதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது என வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். சரக்கு ரயில் பெட்டிகளில் சமமான எடையில் சரக்குகள் ஏற்றப்படுவதால், பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், ரயிலின் செயல் திறனும் அதிகரிக்கும்.
எனவே, இந்தப் பிரச்னையை சரி செய்ய ரயில்வே புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ட்ரோன்கள் மூலம் சரக்குகள் ரயிலில் ஏற்றப்படும்போது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
இத்திட்டம் தென்கிழக்கு ரயில்வே, தென்கிழக்கு மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் செயல்படுத்தப்பட இருக்கிறது. 3 மாதங்களுக்குப் பிறகு இத்திட்டம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்யப்படும். அதில் திருப்திகரமான முடிவு கிடைத்தால் அடுத்தகட்டமாக இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவெடுக்கப்படும் என்று ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.