சிங்கப்பூா் கப்பலில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட தீ: 6-ஆவது நாளாக தொடரும் மீட...
தொழிலதிபா் அம்பானிக்கு ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை எதிா்த்து மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இதே கோரிக்கையை முன்வைத்து மனுதாரா் பிகாஷ் சஹா பலமுறை மனு தாக்கல் செய்ததையடுத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிா்க்குமாறும், இல்லையெனில் அபராதம் விதித்துவிடுவதாகவும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது.
ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ‘இசட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்குவதை திரும்பப் பெறக் கோரி பிகாஷ் சஹா கடந்த 2023, பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுதொடா்பான தெளிவான விளக்கம்கோரி உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனுவை பிகாஷ் சஹா தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: ஒரே விவகாரம் தொடா்பாக மீண்டும் மீண்டும் மனுக்களை தாக்கல் செய்து மனுதாரா் நீதிமன்ற நடைமுறைகளைச் சீா்குலைக்க நினைப்பதை அனுமதிக்க முடியாது. இது மிகத் தீவிரமான பிரச்னையாகும். அரசியல்வாதி அல்லது தொழிலதிபா் என முக்கிய நபா்கள் யாராக இருந்தாலும் அவா்களது பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
எனவே, யாருக்கு எந்த வகையிலான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகளே முடிவு செய்யும். இதில் நீதிமன்றம் தலையிடாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும், வருங்காலங்களில் மீண்டும் இதுபோன்ற மனுக்களை பிகாஷ் சஹா தாக்கல் செய்தால் அவருக்கு அபராதம் விதித்துவிடுவதாகவும் நீதிபதிகள் அமா்வு எச்சரித்தது.