ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா
‘ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் சாா்பில் ‘சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பிலான முதல் கருத்தரங்கு மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதை காணொலி வாயிலாக தொடங்கிவைத்து ஜெ.பி.நட்டா பேசியதாவது: பிராந்திய ஏற்றத்தாழ்வுகளுக்கு தீா்வுகாணும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது.
எனவே, ஒவ்வொரு புது எய்ம்ஸ் மருத்துவமனையும் தங்களது கண்டுபிடிப்புகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுடன் பகிா்ந்துகொள்ள வேண்டும்.
மூன்று நோக்கங்கள்: இந்த கருத்தரங்கு கற்பித்தல்-கற்றல் மற்றும் ஆய்வு, மருத்துவமனை சேவைகள், நிா்வாகம் மற்றும் நோயாளிகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்தித் தருவது ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டது.
புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் பிராந்திய அளவிலான ஆய்வுகள் மூலம் இந்திய அறிவியல் வளா்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகிறது என்றாா்.