கடைசி செல்ஃபி! லண்டன் கனவுடன் புறப்பட்ட மருத்துவ தம்பதியின் கதை...
வருமான வரிக் கணக்கு தாக்கல்! இந்த 5 தவறுகளை மறந்தும் செய்துவிடாதீர்கள்!!
2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான இணைப்புகளை, வருமான வரித் துறை துவக்கியிருக்கிறது.
எனவே, வருமான வரிக் கணக்கை, கணக்குத் தணிக்கையாளர் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லாத, தனி நபர்கள், 2024-25ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தேதிக்குள் தாக்கல் செய்துவிடுவது நல்லது.
வழக்கமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக இருந்து வந்த நிலையில், அது செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரித் துறை உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு பிரிவுகளில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோருக்கான அனைத்து வருமான வரிக்கணக்கு விண்ணப்பங்களையும் வருமான வரித்துறை வெளியிட்டுவிட்டது.
வருமான வரிக் கணக்கு எனப்படும் ஐடிஆர் - 1 விண்ணப்பம் என்பது ஆண்டு வருமானம் ரூ.50 லட்சத்துக்குள் இருக்கும் தனிநபருக்கானது. அதுபோல ஐடிஆர் - 4 விண்ணப்பம், 50 லட்சம் வரை வருமானம் உள்ள தனிநபர்கள், இந்து ஒருங்கிணைந்த குடும்பங்கள் மற்றும் தகுதியுள்ள நிறுவனங்கள், ஊகத்தின் அடிப்படையிலான வரிவிதிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும்.
கடும் சவால்
பல்வேறு விதமான விண்ணப்பங்கள், ஆவணங்களை கையாள்வதால், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது என்பது சற்று சவாலானதுதான். அதுவும் தொழில்முறை பயிற்சி பெற்றவர்களின் உதவி இல்லாமல் கணக்குத் தாக்கல் செய்யும் தனிநபர்களுக்கு இது மிகவும் சவாலாக இருக்கும். சிறிய தவறு கூட மிகப்பெரிய சங்கடங்களை உருவாக்கிவிடும். தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.
ஒருவர் பெறும் சம்பளம் மற்றும் அது தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்து கொண்டால் மட்டுமே தவறில்லாமல் ஐடிஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியும்.
சரியான ஐடிஆர் விண்ணப்பம்

சரியான ஐடிஆர் விண்ணப்பத்தைத் தேர்வு செய்வதில்தான் பெரும்பாலானோர் தவறு செய்து விடுவார்கள். தங்களது வருமானம் உள்ளிட்டத் தகவல்களுக்கு ஏற்ப ஐடிஆர் விண்ணப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். தவறான ஐடிஆர் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தால், அது செல்லாது. அபராதத்துக்கு வழிகோலும்.
வருடாந்திர தகவல் அறிக்கை
பலரும் ஐடிஆர் பூர்த்தி செய்யும்போது, தங்களது வருடாந்திர தகவல் அறிக்கை மற்றும் 26ஏஎஸ் படிவத்தை சரிபார்ப்பது இல்லை. இந்த அறிக்கை மற்றும் படிவம்தான் உங்களது பல்வேறு பணப்பரிமாற்றம் மற்றும் வரி செலுத்துவது தொடர்பான முழுமையான ஆவணமாகும். இதனை சப்மிட் செய்வதற்கு முன்பு முழுமையாக சரிபார்க்க வேண்டும்.
முழுமையாக பூர்த்தி செய்யாமல் விட்டுவிட்டால்

தவறுதலாக அல்லது கவனிக்காமல் வருவாய் மூலங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை அளிக்காமல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தாலும் சிக்கல்தான். இதற்கான அபராதம் 200 சதவீதம் வரை இருக்கும். எனவே, ஒருவர் அனைத்து வருவாய் மூலங்களையும் அளிக்க வேண்டும்.
வருவாய் விலக்குகளை மறக்க வேண்டாம்
சில வருமானங்களுக்கு வரி விலக்கு இருந்தாலும் கூட, அதனை ஐடிஆர் தாக்கலில் சரியான பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
வேலையை மாற்றியிருந்தால்

வருமான வரி செலுத்துபவர், பணியிடத்தை மாற்றியிருந்தால், இரண்டு நிறுவனங்களில் பெற்ற வருமானத்துக்கான கணக்குகளை சரியாக சமர்ப்பிக்க வேண்டும். ஒரு இடத்தில் பணியிலிருந்து வெளியே வரும் போது படிவம் 16 பெற்றுக்கொள்ள வேண்டும்.
வீட்டு வாடகைப் படி
வீட்டு வாடகைப் படியை தவறாகப் பதிவு செய்துவிட்டால் அபராதம் விதிக்கப்படலாம். வாடகை ஒப்பந்தம், வாடகை ரசீது போன்றவற்றை சரியாக வைத்திருக்க வேண்டும்.
வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதில் ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் உரிய கணக்குத் தணிக்கையாளர் அல்லது பயிற்சி பெற்றவர்களிடம் விளக்கம் பெற்று தாக்கல் செய்யலாம்.