வெப்ப அலையின் பிடியில் சிக்கிய தில்லி: சிவப்பு எச்சரிக்கை!
தலைநகர் தில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் கோடைவெய்யில் கொளுத்திவருகின்றது. ஆனால் தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோடை வெப்பத்தின் பிடியிலிருந்து இந்த மாநிலங்கள் தப்பித்துள்ளது.
கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் மிதமானது முதல் கனமழை பெய்துவரும் நிலையில், தலைநகர் தில்லியில் அதற்கு மாறாக கடும் வெய்யில் வெளுத்தி வருகின்றது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தில்லியின் என்சிஆர் பகுதியில் இன்று காலை 10 மணி வரை சுமார் 36 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளது. இதனால் தேசிய தலைநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான வெப்பத்திற்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
கடும் வெப்பநிலையானது இன்று நாள் முழுவதும் நீடிக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 43 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் ஐஎம்டி எச்சரித்துள்ளது. நாளை(ஜூன் 13) வெள்ளிக்கிழமை முதல் இந்த வெப்பநிலையானது படிப்படியாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிவப்பு எச்சரிக்கையை அடுத்து, குடியிருப்பாளர்கள் நீர் ஆகாரம் அதிகம் எடுத்துக்கொள்ளவும், நேரடியாகச் சூரிய ஒளி படும் உச்ச வெப்ப நேரங்களில் கூடுமானவரை வெளியில் வருவதைத் தவிர்க்கலாம். மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.
தில்லி என்சிஆர் பகுதியில் உள்ள ஒருவர் கூறுகையில்,
தினமும் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருப்பதால் வெப்ப அலை காரணமாக அது மிகவும் கடினமாகிறது. அதிகாலையில் கூட, சாலையில் செல்லமுடியாத அளவிற்கு வெப்பம் நிலவுகிறது. வீடுகளை விட்டு வெளியேறுவதே மிகவும் கடினமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.
தலைநகரை வெப்ப அலை வாட்டி வதைத்து வருவதால், சுகாதார அதிகாரிகள், வானிலை நிபுணர்கள் மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள் இருக்கவும், வெப்பம் தொடர்பான நோய்களைத் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.