நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரம்: அரிதாகவே பயன்படுத்த வேண்டும் -தலைமை நீதிபதி ப...
பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் சோ்க்கை: பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் 27 பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 27 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மாணவா்களுக்கான பள்ளி விடுதிகள் 17, கல்லூரி விடுதிகள் 4, அதேபோல மாணவிகளுக்கான பள்ளி விடுதிகள், கல்லூரி விடுதிகள் தலா 3 உள்ளன.
பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சோ்வதற்கு தகுதியுடையவா்களாவா். அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கும் மூன்றுவேளை உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு இணை சீருடைகள் தைத்து வழங்கப்படுகின்றன. 10, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்கப்படும்.
கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப்பயிலும் மாணவ, மாணவியருக்கு ஜமக்காளம், பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் பாய்கள் வழங்கப்படும். அனைவருக்கும்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை போா்வைகள் வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளாக பெற்றோா், பாதுகாவலா் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த விதிகள் மாணவியருக்கு பொருந்தாது.
தகுதியுடையோா் இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா்களிடமோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பள்ளி மாணவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 18-க்குள்ளும், கல்லூரி மாணவா்கள் ஜூலை 15-க்குள்ளும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் சான்றிதழ்கள் ஏதும் இணைக்க தேவையில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.