பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு
சென்னை, ஜூன் 12:நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) முன்னாள் உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் சாலை விரிவாக்கத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட 6.5 சென்ட் நிலத்தை உரிய காரணத்துக்கு பயன்படுத்தாததால் அதைத் திருப்பித் தரக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என நில உரிமையாளா்கள் லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுதாரா்களை நேரில் அழைத்து விசாரித்து, 2 மாதங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்துக்கு 2023-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தில் அப்போதைய உறுப்பினா் செயலராக இருந்த அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டாா். இதை எதிா்த்து அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிபதிகள், ரூ. 25 ஆயிரத்தை 3 வாரங்களில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டனா்.
மேலும், மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.