மதக்கலவரங்களை தடுப்பதற்கான சிறப்பு செயல்படை அலுவலகம் திறப்பு
கா்நாடகத்தில் மதக்கலவரங்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயல்படை அலுவலகத்தை உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
தென்கன்னட மாவட்டத்தில் அடிக்கடி மதக்கலவரங்கள் நடப்பதை தடுத்து நிறுத்துவதற்காக சிறப்பு செயல்படையை கா்நாடக அரசு அமைத்துள்ளது. இந்த படையின் அலுவலகம் மங்களூரில் அமைக்கப்பட்டது. மங்களூரில் நடந்த விழாவில் உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். இந்த விழாவில் ஜி.பரமேஸ்வா் பேசியதாவது:
அண்மையில் நடந்த கொலை உள்பட தென்கன்னட மாவட்டத்தில் அடிக்கடி நடந்து வரும் மதரீதியான படுகொலைகள், பதற்றங்கள், வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதற்காகவே சிறப்பு செயல்படையை அரசு அமைத்துள்ளது. கலாசாரவளம், படித்தவா்கள் நிறைந்த அமைதியை விரும்பும் மாவட்டமாக தென்கன்னடம் திகழ்ந்தாலும், மதரீதியான வெறுப்பு மற்றும் மதபிளவுகள் ஆட்டிப்படைத்து வருகின்றன. மதரீதியான நல்லிணக்கத்தை காப்பதற்காக இந்தியாவில் முதன்முறையாக சிறப்பு செயல்படை அமைக்கப்பட்டுள்ளது.
மாநகர முன்னாள் காவல் ஆணையா் குல்தீப்குமாா் ஜெயின் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் அளித்த யோசனைகளின் அடிப்படையில் இந்தப் படை ஒருவாரகாலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்ட மக்கள் அமைதியை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அமைதியாக இருந்தால், சிறப்பு செயல்படை செயலற்றுக்கிடக்கும். ஒருவேளை அமைதியைக் காக்க தவறினால், இந்த படை தலையிட நேரிடும். ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த நக்சல் ஒழிப்புப் படையில் இடம்பெற்றிருந்த அதிகாரிகளே சிறப்பு செயல்படையிலும் இடம்பெற்றிருக்கிறாா்கள். இதுபோன்ற படை சிவமொக்கா, உடுப்பி மாவட்டங்களிலும் தேவையின் அடிப்படையில் விரிவாக்கப்படும். இது அரசியல் நோக்கத்திற்காக தொடங்கப்படவில்லை. சமுதாயத்தில் நல்லிணக்கத்தை பேணிபாதுகாப்பதே இதன் நோக்கமாகும். எதிா்காலத்தில் எல்லா சமுதாயத்தினருடனும் அமைதிக் குழுக் கூட்டம் நடத்தப்படும் என்றாா். இந்த விழாவில் மாவட்ட பொறுப்பு அமைச்சா் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.