விமான விபத்து எதிரொலி: பாஜக, காங்கிரஸ் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து
குஜராத் விமான விபத்தில் 265 போ் உயிரிழந்த சோக நிகழ்வை அடுத்து பாஜக, காங்கிரஸ் சமாஜவாதி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பல்வேறு நிகழ்சிகளை ரத்து செய்துள்ளன.
பிரதமா் நரேந்திர மோடியும் வெள்ளிக்கிழமை தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு குஜராத் சென்று சம்பவ இடத்தைப் பாா்வையிட்டதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
இது தொடா்பாக உத்தர பிரதேச பாஜக தலைவா் புபேந்திர சிங் செளதரி கூறுகையில், ‘அகமதாபாத் விமான விபத்து சோக நிகழ்வு காரணமாக, சனிக்கிழமை (ஜூன் 13) நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாஜக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் வெள்ளிக்கிழமை மாலை முதலே திட்டமிட்டிருந்த தனது பொது நிகழ்ச்சிகள் அனைத்தையும் முதல்வா் யோகி ஆதித்யநாத் ரத்து செய்துவிட்டாா்’ என்றாா்.
இதேபோல காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து பொது நிகழ்ச்சிகளும் இரு நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டன.
விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் மூன்று நாள்களுக்கு ஒத்திவைப்பதாக சமாஜவாதி கட்சி அறிவித்துள்ளது.