டிரம்ப் எச்சரிக்கையை இந்தியா முறியடிப்பு? ஐபோன் உற்பத்தியில் மைல்கல்!
இந்தியாவில் கடந்தாண்டு ஐபோன் உற்பத்தியை, நிகழாண்டு முதல் 5 மாதங்களிலேயே தாண்டியது.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மட்டுமே அமெரிக்காவில் விற்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மே மாதத்தில் அந்நாட்டு நிறுவனங்களிடம் எச்சரித்திருந்தார். மேலும், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறும் ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், நிகழாண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்களின் மதிப்பு, கடந்தாண்டைவிட அதிகளவில் இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நிகழாண்டு மார்ச் முதல் மே மாதம் வரையில் 3.2 பில்லியன் டாலர் (ரூ. 27.6 ஆயிரம் கோடி) மதிப்புள்ள ஐபோன்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

அவற்றில் 97 சதவிகிதம் அமெரிக்காவுக்குத்தான் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. 2025, மார்ச் மாதத்தில் மட்டும் 1.3 பில்லியன் டாலர் மதிப்பிலும், மே மாதத்தில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலுமான ஐபோன்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும், முதல் 5 மாதங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்களின் மதிப்பு 4.4 பில்லியன் டாலர். இது, கடந்தாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்களின் மதிப்பான 3.7 பில்லியன் டாலரைவிட அதிகமாகும்.
இதன் மூலம், ஸ்மார்ட்போன் உற்பத்தியில், உலகளவில் முக்கிய பங்களிப்பை இந்தியா கொண்டிருப்பது உறுதியாகிறது.
இதையும் படிக்க:மெல்ல அதிகரிக்கும் கரோனா: 7,400 ஆன பாதிப்பு!