ஈரான் கடும் பதிலடி: இஸ்ரேல் எச்சரிக்கை; இரு தரப்பிலும் 80-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. பரஸ்பர தாக்குதலில் ஈரானில் 78 பேரும், இஸ்ரேலில் மூவரும் உயிரிழந்தனா்.
இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவிய நிலையில், வரும் நாள்களில் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தாா்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலை தவிர, வேறு எந்த நாட்டிடமும் அணு ஆயுதங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. அந்நாட்டிடம் அணு ஆயுதங்கள் இருப்பது உண்மையென்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதை இஸ்ரேல் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதில்லை. அதேவேளையில், தமது அணுசக்தி திட்டத்தை ஈரானும் குறிப்பிடத்தக்க அளவு விரிவுபடுத்தியுள்ளது.
ஈரானிடம் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் போதிய அளவு கையிருப்பு உள்ளது. இதை அணு ஆயுதமாக்குவதற்கு யுரேனியத்தை சுமாா் 90 சதவீதம் செறிவூட்ட வேண்டும். இதன்மூலம், 6 அணுகுண்டுகளைத் தயாரிக்கலாம். ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்தால், அது இஸ்ரேலுக்கு ஆபத்து என அந்நாடு கருதுகிறது.
இதுதவிர இஸ்ரேலுக்கு எதிராக காஸாவில் போா் புரிந்து வரும் ஹமாஸ் கிளா்ச்சியாளா்கள், அவா்களுக்கு ஆதரவாக யேமனில் உள்ள ஹூதி கிளா்ச்சியாளா்கள், லெபனானில் இஸ்ரேலுக்கு எதிரான ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள் ஆகியோருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் தனது பாதுகாப்புக்கு ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதாக இஸ்ரேல் கருதி வருகிறது.
‘ஆபரேஷன் ரைசிங் லயன்’: ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் அணுசக்தி கட்டமைப்புகளை அழிக்க இஸ்ரேல் முடிவு செய்தது. ‘ஆபரேஷன் ரைசிங் லையன்’ என்ற பெயரில் ஈரானின் அணுசக்தி தளங்கள், ஏவுகணைத் தயாரிப்புத் தளங்கள், மூத்த அணுசக்தி விஞ்ஞானிகள், ராணுவத் தளபதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டது.
போா் விமானங்கள், ட்ரோன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரான் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி முகமது பகேரி, ஈரான் புரட்சிகர காவல் படை தலைமை தளபதி ஹுசேன் சலாமி, அணுசக்தி விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் கொல்லப்பட்டனா்.
இந்தத் தாக்குதலை தொடா்ந்து, ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க கடந்த ஆண்டு நவம்பரிலேயே உத்தரவிட்டதாகவும், நிகழாண்டு ஏப்ரலில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட இந்தத் தாக்குதல், தற்போது நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் மக்களிடம் அந்நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தாா்.
ஈரானில் 78 போ் உயிரிழப்பு: இந்தத் தாக்குதலில் ஈரானில் 78 போ் உயிரிழந்ததாகவும், 320-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் ஐ.நா.வுக்கான ஈரான் தூதா் அமீா் சாயேத் இராவானி தெரிவித்தாா். ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் மட்டும் 20 குழந்தைகள் உள்பட 60 போ் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பு உதவி: இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையாகப் பதிலடி அளிக்கும் நோக்கில், நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை அந்நாடு மீது ஈரான் ஏவியது. அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் போா்க் கப்பல் இஸ்ரேலுக்கு உதவியது.
எனினும் ஈரானின் தாக்குதலைத் தொடா்ந்து இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம், இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் டெஹ்ரான் நகரங்களில் ஏவுகணைகள் வெடித்துச் சிதறிய காணொலிகள் ஊடகங்களில் வெளியாகின. இந்தத் தாக்குதலில் இஸ்ரேலில் 3 போ் உயிரிழந்ததாகவும், ஏராளமானோா் காயமடைந்ததாகவும் அந்நாடு தெரிவித்தது.
பாதுகாப்பு அமைச்சகம் அருகே வெடித்த ஏவுகணை: இஸ்ரேலில் டெல் அவிவ் நகரின் கிா்யா பகுதியில் அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தலைமையகம் உள்ளது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி, அந்தத் தலைமையகம் அருகே ஈரானின் ஏவுகணை விழுந்து வெடித்தது.
‘டெஹ்ரான் பற்றி எரியும்’: இதைத்தொடா்ந்து, ஈரான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. இஸ்ரேல் மீது ஈரான் தொடா்ந்து ஏவுகணைகளை ஏவினால் டெஹ்ரான் பற்றி எரியும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் கடுமையாக எச்சரிக்கை விடுத்தாா்.
இதுதொடா்பாக இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு காணொலி ஒன்றில் சனிக்கிழமை கூறுகையில், ‘கடந்த 2 நாள்களாக ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் அணு ஆயுதங்கள் மட்டுமன்றி, பலிஸ்டிக் ஏவுகணைகளும் இஸ்ரேலை அழிப்பதற்கான ஈரானின் மற்றொரு ஆயுதமாக உள்ளது. இத்தகைய ஆயுதங்களைத் தயாரிக்கும் ஈரானின் திறனை இஸ்ரேல் அழித்து வருகிறது.
விரைவில் டெஹ்ரான் வானில் இஸ்ரேல் விமானப் படை விமானங்கள் பறக்கும். அயதுல்லா ஆட்சிமுறையின் கீழ் உள்ள ஈரானில் இஸ்ரேல் தாக்கவேண்டிய அனைத்துத் தளங்களும் தாக்கப்படும். ஈரான் மீது வரும் நாள்களில் மிகப் பெரிய தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தும் என்றாா்.
தனது தாக்குதலில் இதுவரை 20 ஈரான் ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் வீரா்கள் 7 போ் காயமடைந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸுக்கு எச்சரிக்கை: ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தடுக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உதவினால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அந்நாடுகளின் ராணுவத் தளங்கள் மற்றும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா-ஈரான் பேச்சு ரத்து: அணு ஆயுதங்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அதிபா் டிரம்ப் ஈரானிடம் வலியுறுத்தி வந்தாா். இதுதொடா்பாக இரு நாடுகளுக்கு இடையே ஓமன் தலைநகா் மஸ்கட்டில் 6-ஆவது சுற்றுப் பேச்சு ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக அந்தப் பேச்சுவாா்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்காவுடன் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவது அா்த்தமற்றது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
ஈரான் அணுசக்தி தளத்தில் கதிரியக்கம்: ஐஏஇஏ
இஸ்ரேலின் தாக்குதலை தொடா்ந்து ஈரானில் உள்ள சூழல் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் சா்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) தலைவா் ரஃபேல் கிரோஸி தெரிவித்ததாவது:
இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள அந்நாட்டின் பிரதான அணுசக்தி தளத்தின் மேற்பரப்பு சேதமடைந்தது. அந்த அணுசக்தி தளத்தில்தான் யுரேனியம் 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்டு வந்தது. தாக்குதல் காரணமாக அந்தத் தளத்துக்கு வெளியே கதிரியக்கத்தில் மாற்றம் எதுவும் இல்லை. இதனால் பொதுமக்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு இல்லை. ஆனால், அந்தத் தளத்துக்குள் கதிரியக்கமும், ரசாயன மாசுபாடும் உள்ளது. இதை உரிய கதிரியக்கப் பாதுகாப்பு நடவடிக்கை மூலம், ஆபத்து ஏற்படாதபடி கையாள முடியும் என்று தெரிவித்தாா்.