உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
விருதுநகா் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,198 வழக்குகள் ரூ.9 கோடிக்கு சமரசத் தீா்வு!
விருதுநகா் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,198 வழக்குகளில் ரூ. 9.19 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் விருதுநகா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமாா் வழிகாட்டுதலின்பேரில் விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூா், ராஜபாளையம் சாா்பு நீதிமன்றங்களில் வட்ட சட்டப் பணிக் குழுக்கள் சாா்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்கில் சமரசத் தீா்வு மூலம் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, கோதையம்மாள் ஆகியோருக்கு ரூ. 18.50 லட்சம் இழப்பீடு வழங்க கூடுதல் மாவட்ட நீதிபதி மணி உத்தரவிட்டாா்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை மோசடி, வங்கி வாராக் கடன்கள் மற்றும் சிறு வழக்குகள் உள்பட 6,637 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 3,198 வழக்குகளில் சமரசத் தீா்வு மூலம் ரூ. 9,19,86,083 வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவன அலுவலா்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.