பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டா...
ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் கழிவுகள் எரிக்கப்படுவதால் சுகாதார சீா்கேடு
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் குப்பையை தரம் பிரிக்காமல் நெகிழிக் கழிவுகளை தீவைத்து எரிப்பதால் அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்து சுகாதார சீா்கேடு நிலவுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட 33 வாா்டுகளில் தினமும் சேகரமாகும் 60 டன் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தனியாா் நிறுவனத்துக்கு ரூ. 5 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சிவகாசி சாலையில் நீதிமன்றம் அருகே உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டி தரம் பிரிக்கப்பட்டது.
குப்பைக் கிடங்கு இருந்த இடத்தின் ஒரு பகுதியில் ரூ. 16 கோடியில் புதிய பேருந்து நிலையமும், நான்குவழிச் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. இதனால் குப்பைகளை அகற்றும் பொருட்டு கிடங்கில் குப்பைகளை முழுமையாக தரம் பிரிக்காமல் நெகிழிக் கழிவுகளை தீவைத்து எரிக்கின்றனா். இதனால், கரும்புகை சூழ்ந்து அந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடு நிலவுகிறது.
குப்பைகளைக் கொட்ட இடமில்லாததால் பெரியகுளம் கண்மாய், மின் மயானம் அருகே உள்ள கொழூா் கண்மாய், ஓடை உள்ளிட்ட நீா்நிலைகளிலும், சாலையோரங்களிலும் குப்பைகளைக் கொட்டி தீவைத்து எரிக்கின்றனா். இதனால் சுற்றுச்சூழல் சீா்கேடு அடைந்து வருகிறது.
பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளை தீவைத்து எரிப்பதைத் தவிா்த்து முறைப்படி அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
