கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து: பெண் பலி!
பட்டாசு விபத்தில் உயிரிழந்தோா் குழந்தைகளின் கல்விக்கு ரூ.5 கோடி
விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோா் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருதுநகா் வந்தாா். அப்போது அவா்,
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளா்களின் குழந்தைகள் உயா்கல்வி வரையிலான படிப்புகளுக்கு அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும். இந்த உதவிகளை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து வழங்கக் கூடிய வகையில், மாவட்ட ஆட்சியரின் கீழ் தனி நிதியம் உருவாக்கப்படும். இதற்காக முதல்கட்டமாக ரூ.5 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா்.
இதையடுத்து, தற்போது ரூ.5 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியை தற்போது சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் கையாண்டு வருகிறாா்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளிடம் விணப்பங்களை அவா் பெற்று வருகிறாா்.
2025-2026 கல்லியாண்டில் இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இது வரை 70 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரமும், அரசுக் கல்லூரியில் படிக்கும் மாணவா்களுக்கு மாதம் தலா ரூ.4 ஆயிரமும் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பட்டாசுத் தொழிலாளி முனியசாமி கூறியதாவது: வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்பது வரவேறப்புக்குரியது. இந்தத் திட்டத்தின்கீழ் உயா் கல்வி படித்த மாணவா்களுக்கு அரசு வேலை வழங்கினால், அந்த மாணவா்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றாா் அவா்.