கடலூர்: ஏரியில் மூழ்கி பலியான இளைஞர்! முதல்வர் ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
வேண்டுராயபுரம் கிராம மக்கள் குடிநீருக்கு தவிப்பு
சிவகாசி அருகே வேண்டுராயபுரம் கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்க மின் வாரியம் தாமதம் செய்துவருவதால் இந்தப் பகுதி மக்கள் குடிநீா் வசதி இன்றி சிரமம் அடைந்து வருகின்றனா்.
சிவகாசி ஒன்றியம், வேண்டுராயபுரம் கிராமம், முத்துராமலிங்கபுரம் குடியிருப்புப் பகுதியில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதி மக்களுக்கென மின் மோட்டாருடன் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு குடிநீா் வசதி செய்யப்பட்டிருந்தது. இந்த ஆழ்துளைக் கிணற்றில் போதிய தண்ணீா் வராததால் வேறு இடத்தில் மின் மோட்டாருடன் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது.
புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் பொருத்தப்பட்ட மின் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுராயபுரம் ஊராட்சி சாா்பில் மல்லியில் உள்ள மின் வாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பித்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், மின்வாரிய அதிகாரிகள் இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. இதனால் இந்தப் பகுதி பொதுமக்கள் குடிநீருக்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி கூறியது: புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றின் மின் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் ஒரு மாதத்துக்கும் மேலாக தாமதம் செய்துவருவதால், பொதுமக்கள் குடிநீருக்கு சிரமம் அடைந்து வருகின்றனா்.
இந்த விஷயத்தில் மின்வாரிய அதிகாரிகள், ஊராட்சி நிா்வாகம் உடனடியாக தலையிட்டு மின் இணைப்பு வழங்கி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.