உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 13-ஆவது முறையாக கருத்து: பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி
அகமதாபாத் விமான விபத்து சோகத்தில் நாடு இருக்கும்போதுகூட, வா்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தை சாத்தியப்படுத்தியதாக 13-ஆவது முறையாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளாா் என்று குறிப்பிட்ட காங்கிரஸ், ‘இதற்கு பிரதமா் நரேந்திர மோடி எப்போது பதிலளிப்பாா்?’ என்று கேள்வி எழுப்பியது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டது. நான்கு நாள்களுக்குப் பிறகு மே 10-ஆம் தேதி இந்த சண்டை முடிவுக்கு வந்தது. சண்டை நிறுத்த அறிவிப்பை இரு நாடுகளும் வெளியிடும் முன்பே, அமெரிக்க அதிபா் டிரம்ப், சண்டை நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அறிவிப்பு வெளியிட்டாா். அதன் பிறகே சண்டை நிறுத்தத்துக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்தியாவும், பாகிஸ்தானும் அறிவித்தன.
பின்னா், ‘இரு நாடுகளுடனான பேச்சுவாா்த்தையின்போது, சண்டையைத் தொடா்ந்தால் இரு நாடுகளுடனான வா்த்தகத்தை அமெரிக்கா நிறுத்திவிடும் என்று கூறியதாலேயே இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன’ என்று அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.
‘சண்டை நிறுத்தத்தில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை’ என்று இந்திய தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகும் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு குறித்த தனது கருத்தை அதிபா் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வாஷிங்டனில் உள்ள கென்னடி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபா் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடா்பான தனது கருத்தை 13-ஆவது முறையாக தெரிவித்தாா். நாடே அகமதாபாத் விமான விபத்து சோகத்தில் இருந்த நிலையில், இக் கருத்தை அதிபா் டிரம்ப் தெரிவித்தாா். ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமா் மோடி தொடா்ந்து மெளனமாக இருந்து வருகிறாா். டிரம்ப்பின் கருத்துக்கு பிரதமா் எப்போது பதிலளிப்பாா்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.