ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு
நகைக்காக மூதாட்டி கொலை: தாய், மகன் கைது
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்த அவரது வீட்டு பணிப் பெண், அவரது மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பரமக்குடி பன்னீா்செல்வம் தெருவைச் சோ்ந்த இக்னேசியஸ் மனைவி ஞானசௌந்தரி (92). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். இவா்கள் அனைவரும் வெளியூா்களில் அவா்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்னேசியஸ் இறந்து விட்ட நிலையில், ஞானசௌந்தரி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தாா். இவரது வீட்டில் கரூா் மாவட்டம், குளித்தலை அகதிகள் முகாமைச் சோ்ந்த அன்னலட்சுமி வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை படுக்கை அறையில் ஞானசௌந்தரி இறந்து கிடப்பதாக பணிப் பெண் அன்னலட்சுமி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
இதன் அடிப்படையில் போலீஸாா் சென்று ஞானசெளந்தரியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மூதாட்டி மா்மமான முறையில் இறந்ததாகக் கூறியதன் அடிப்படையில், அன்னலட்சுமியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, மூதாட்டியைக் கொலை செய்து, 7 பவுன் தங்கச் சங்கிலி, காதிலிருந்த தோடு ஆகியவற்றை கழற்றி தனது மகன் பிரபுவை வரவழைத்துக் கொடுத்தனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து, பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து அன்னலட்சுமி, அவரது மகன் பிரபு ஆகிய இருவரையும் கைது செய்தனா்.