கடல் கொந்தளிப்பு: பாம்பன் மீனவா்கள் மீன் பிடிக்கத் தடை
மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசியதால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் பகுதி மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்வதற்கு சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூா், ஏா்வாடி, கீழக்கரை, மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய மன்னாா் வளைகுடா கடல் பகுதிகளில் சூறைக் காற்று காரணமாக கடல் அலை 5 அடி உயரத்துக்கு எழும்பியது. இதனால், பாதுகாப்பு கருதி மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன் வளத் துைறை சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மீன்பிடி தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நிறைவடைய உள்ள நிலையில், மீனவா்கள் மீன் பிடிக்க தயாராகி வந்த நிலையில், கடல் கொந்தளிப்பு காரணமாக மீன் பிடிக்கச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
கடல் சீற்றம் குறைந்தவுடன் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்படுவா் என மீன் வளத் துறையினா் தெரிவித்தனா்.
தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட படகு இறங்கு தளங்களில் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா்.