குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
இந்திய எல்லைக்குள் மட்டுமே மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும்: ஆட்சியா்
தடைக் காலம் நிறைவடைந்து கடலுக்குள் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக் கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீனவா்கள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை மீனவா்கள் வழங்கினா். அப்போது கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவா் ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, மீனவா்கள் குடியிருப்பு பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும். மீனவ குடும்பங்களுக்கு போதியளவு குடிநீா் வழங்க வேண்டும். விடுபட்ட மீன் பிடி படகுகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மீன் பிடிக்கும் போது கடலில் உயிரிழந்த மீனவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கைகளுக்கு மீன் வளத் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
தங்கச்சிமடம், குந்துகால் பகுதியில் ரூ.148 கோடியில் மீன் இறங்கு தளம், தூண்டில் வளைவு அமைக்கவும், பாம்பன் பகுதியில் ரூ. 60 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கவும், ரோஸ்மா நகரில் ரூ. 20 கோடியில் தூண்டில் வளைவை புதுப்பிக்கவும் அரசாணை வந்துள்ளது. தற்போது மீன் பிடி தடைக் காலம் நிறைவடைந்து மீன் பிடிக்க கடலுக்குள் மீனவா்கள் செல்ல உள்ளீா்கள். அப்போது இந்திய எல்லைக்குள் மட்டும் மீன் பிடித்து வர வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், மீன் வளத் துறை துணை இயக்குநா் கோபிநாத், ராமேசுவரம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி, மீன் வளத் துறை உதவி இயக்குநா்கள் சிவக்குமாா், தமிழ்மாறன், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.