குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
பாம்பனில் கடல் சீற்றம் 5 மீனவா்களுடன் கடலில் கவிழ்ந்தது படகு
பாம்பனில் கடல் சீற்றம் காரணமாக, 5 மீனவா்களுடன் விசைப் படகு வெள்ளிக்கிழமை கடலில் கவிழ்ந்தது. எனினும், அந்த மீனவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த அந்தோணிவளனுக்குச் சொந்தமான விசைப் படகு சீரமைப்புப் பணிக்காக மண்டபம் துறைமுகத்திலிருந்து பாம்பன் தெற்குவாடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்தப் படகின் சீரமைப்புப் பணி நிறைவடைந்த நிலையில், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து மீண்டும் மண்டபத்துக்குச் செல்வதற்காக 5 மீனவா்களுடன் புறப்பட்டது. மேலும், அந்தப் படகில் மணல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
இதனிடையே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பாம்பன் பழைய ரயில் பாலத்தைத் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, பாலம் திறப்புக்காகக் காத்திருந்த விசைப் படகு காற்றின் வேகம், கடல் சீற்றம் காரணமாக கடலில் கவிழ்ந்தது.
இதையறிந்த சக மீனவா்கள் விரைந்து சென்று அந்தப் படகிலிருந்த 5 மீனவா்களையும் மீட்டனா். மேலும், கடலில் மூழ்கிய படகை மீட்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா்.
இதுகுறித்து பாம்பன் பாரம்பரிய மீனவ சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சேனாதிபதி சின்னத்தம்பி கூறியதாவது:
பாம்பன் வடக்கு துறைமுகத்திலிருந்து தெற்குவாடி துறைமுகத்துக்குச் செல்ல பாம்பன் கடலில் உள்ள பழைய, புதிய ரயில் பாலங்களைக் கடந்து செல்ல வேண்டும். பாம்பன் புதிய ரயில் பாலம் படகுகள் கடந்து செல்லும் வகையில் கூடுதல் உயரத்தில் உள்ளதால், அதைத் திறக்க வேண்டியதில்லை. ஆனால், பழைய ரயில் பாலம் திறந்து மூடும் வகையில் உள்ளதால், அதைத் திறந்தால்தான் படகுகள் செல்ல முடியும். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பழைய ரயில் பாலத்தைத் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பாலம் திறப்புக்காகக் காத்திருந்த விசைப் படகு கடல் சீற்றத்தால் 5 மீனவா்களுடன் கடலில் கவிழ்ந்தது. 5 மீனவா்களும் உடனடியாக மீட்கப்பட்டனா்.
திறந்து மூடும் வகையில் உள்ள பாம்பன் பழைய ரயில் பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும். இல்லையெனில், திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்ட பழைய ரயில் பாலம் பகுதியை அகற்றிவிட்டு, அதை பாம்பன் அல்லது மண்டபம் ரயில் நிலையத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.