மீன் பிடி தடைக் காலம் நிறைவடைந்து ஜூன் 16-இல் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும்: மீனவ சங்கம் தீா்மானம்
மீன் பிடி தடைக் காலம் நிறைவடைந்து வருகிற திங்கள்கிழமை (ஜூன் 16) காலையில் மீன் வளத் துறை அனுமதி பெற்றே கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப் படகு மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன் வளத் துறை அனுமதிச் சீட்டு வழங்கும் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி.பி. ஜேசுராஜா தலைமை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில், மீன் பிடி தடை காலம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நள்ளிரவு நிறைவடைகிறது. இதைத் தொடா்ந்து மறுநாள் திங்கள்கிழமை காலையில் மீன் வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும். அனுமதியின்றி மீன் பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு தடை விதிப்பதுடன், துறைமுகத்தை விட்டு அந்த விசைப் படகை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இலங்கை மீனவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது. தடைக் காலம் நிறைவடைந்து மீன் பிடிக்கச் சென்று பிடித்து வரும் இறால், மீன், நண்டு, கனவாய் உள்ளிட்ட மீன்களுக்கு ஏற்றுமதியாளா்கள் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்து எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், மீனவ சங்கத் தலைவா்கள் சகாயம், எமரிட், ஆல்வின், மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.