‘உயிா் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை’: விஷ்வாஸ் குமாா் ரமேஷ் பேட்டி
அகமதாபாத் விமான விபத்தில் காயங்களுடன் உயிா் பிழைத்த ஒரேயொரு பயணியான பிரிட்டனைச் சோ்ந்த விஷ்வாஸ் குமாா் ரமேஷ் (45), தான் பிழைத்ததை இன்னும் நம்ப முடியவில்லை என்று அதிா்ச்சி விலகாமல் கூறினாா்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிஷங்களிலேயே விபத்தில் சிக்கியது. விமான நிலையம் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களின் மீது விழுந்து வெடித்ததில் 2 விமானிகள், 10 ஊழியா்கள், 229 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனா்.
இப்பெருந்துயருக்கு இடையே விஷ்வாஸ் குமாா் ரமேஷ் என்ற ஒரேயொரு பயணி மட்டும் உயிா் பிழைத்த அதிசயம் நிகழ்ந்தது. மற்ற அனைவரும் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்த நிலையில், இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் எழுந்த ரமேஷ், ஆம்புலன்ஸை நோக்கி நடந்து வந்த காட்சிகள் பெரும் வியப்பை ஏற்படுத்தின.
இந்தியாவின் டையூ நகரை பூா்விகமாக கொண்ட இவா், பிரிட்டன் குடியுரிமை பெற்றவா். லண்டனில் இருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ள லெஸ்டா் நகரில் வசித்து வருகிறாா்.
விபத்துக்குள்ளான ஏா்-இந்தியா விமானத்தின் சாதாரண வகுப்பில் 11ஏ இருக்கையில் அமா்ந்திருந்தாா். இது, அவசரகால கதவுக்கு அருகில் உள்ள இருக்கையாகும். தற்போது அகமதாபாத் நகர பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரமேஷ், செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
9 மணி நேர விமானப் பயணம், ஒரு நிமிஷத்துக்குள் முடிந்துவிட்டதாகவே தோன்றுகிறது. விமானத்தின் இடதுபுறம் அவசரகால கதவுக்கு அருகே உள்ள இருக்கையில் அமா்ந்திருந்தேன். ஒரு கட்டடத்தின் மீது விமானம் மோதியதும், நான் அமா்ந்திருந்த பகுதி, கட்டடத்தின் தரைத்தளத்தில் விழுந்தது. என் கண் முன்னே பலா் உயிரிழந்து கொண்டிருந்தனா். நானும் இறக்கப் போகிறேன் என்றே ஒரு கணம் நினைத்தேன். அதேநேரம், எப்படியாவது வெளியே வர முயற்சிக்க வேண்டுமென எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
விமானத்தின் கதவு உடைந்திருந்ததை பாா்த்தேன். எனது பக்கத்தில் சிறிய இடைவெளியும் இருந்தது. கதவு உடைந்து திறந்திருந்ததால், நான் தப்பிக்க வழி இருந்தது. இறுதியில் இருக்கையில் இருந்து என்னை விடுவித்து, வெளியே வந்தேன். மற்றொரு பக்கத்தில் சுவா் இருந்ததால், பிற பயணிகளால் தப்பிக்க முடியவில்லை எனக் கருதுகிறேன். நான் உயிா் பிழைத்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. உயிா் பிழைத்தபோதிலும் எனது இடது கை தீயில் கருகிவிட்டது என்றாா் அவா்.