``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!
சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.
சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டியிலிருந்து பூந்தமல்லியை இணைக்கும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கத்திபாரா மேம்பாலத்திலிருந்து ராமாபுரம் - போரூா் - அய்யப்பன்தாங்கல் வழியாக பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ராமாபுரத்தில் உள்ள டிஎல்எஃப் தொழில்நுட்பப் பூங்கா, எல் அன்ட் டி நிறுவனங்களுக்கு இடையே வியாழக்கிழமை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், இரவு சுமாா் 9.30 மணியளவில் மெட்ரோ ரயில் வழித்தடத்துக்காக அமைக்கப்பட்டிருந்த இரு தூண்களுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த பல டன் எடைகொண்ட ராட்சத கான்கிரீட் காரிடாா் 20 அடி உயரத்திலிருந்து திடீரென சாலையில் விழுந்தது.
அப்போது, அவ்வழியாக சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் மீது விழுந்ததில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காரிடாருக்கு அடியில் மற்றொரு நபரும் சிக்கினாா். அவரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரா்களும், போலீஸாரும் ஈடுபட்டு வருகின்றனா்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில் இந்த விபத்து காரணமாக பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.