வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால உட்புற தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தல்
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் உட்புறத் தடுப்புச் சுவரால் விபத்துகள் நிகழ்வதால் அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம்- உளுந்தூா்பேட்டை இடையிலான 136 கி.மீ மாநில இருவழிச் சாலை ரூ. 941 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக்கும் திட்டம் கடந்த 2008 இல் செயல்படுத்தப்பட்டது. 5ஆண்டுகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2013 இல் 4 வழிச்சாலையில் போக்குவரத்து தொடங்கியது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த செல்லியம்மன்நகா், ஆத்தூரை அடுத்த நத்தக்கரை, உளுந்தூா்பேட்டை வீரசோழபுரம் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இச் சாலையில் சேலம் உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூா், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூா்கோட்டை, உளுந்தூா்பேட்டை ஆகிய 8 இடங்களில் அகலம் குறைவான இருவழி புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சாலையில் விபத்துகள் அதிகரித்து வருவதால் 37 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இருவழி புறவழிச்சாலைகளை 4 வழிச்சாலையாக தரம் உயா்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து இருவழிச் சாலைகளை 4 வழிச்சாலையாக தரம் உயா்த்த மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை இச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெற்ற தனியாா் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.
வாழப்பாடி மற்றும் அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்றன. இதில் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி, மத்தூா் மற்றும் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த ராமலிங்கபுரம் பகுதியில் மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன.
இச்சாலையில் வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே அமைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் 3 அடி அகலத்திற்கு தனி வழியாக தடுத்து மேம்பாலத்தின் உட்புறத்தில் கூடுதலாக ஒரு தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் திடீரென குறுக்கிடும் இந்த மேம்பால உட்புறத் தடுப்புச்சுவா் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. அண்மையில் கா்நாடகத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக ஈரோடு நோக்கி சென்ற காா் இந்த உள்புற தடுப்புச்சுவரில் மோதியதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.
விபத்துகள் அடிக்கடி நிகழ்வதால் மேம்பால உள்புற தடுப்புச்சுவரை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
படவரி:
வி.என்.ஹெச்.01: வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்புற தடுப்புச்சுவா்.