சேலத்தில் இந்தியன் ஆயில் நிறுவன தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்: எரிவாயு சிலிண்டா் விநியோகம் தடைபடாது: அதிகாரிகள் உறுதி
சேலம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன எரிவாயு நிரப்பும் பிளாண்ட் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் எரிவாயு சிலிண்டா் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படாது என வாடிக்கையாளா்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
சேலம் கருப்பூரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டா் நிரப்பும் பாட்டிலிங் பிளாண்ட்டில் நாள்தோறும் 20 ஆயிரம் சிலிண்டா்களில் எரிவாயு நிரப்பப்பட்டு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பிளாண்ட்டில் சிலிண்டா் நிரப்பும் பணியில் 5 நிரந்தர ஊழியா்களும், 80 ஒப்பந்த ஊழியா்களும் பணியாற்றி வருகின்றனா்.
இவா்களில் 2 ஒப்பந்த ஊழியா்களை கடந்தமாதம் ஐஓசி நிா்வாகம் பணியிலிருந்து நிறுத்தியது. மேலும், பிளாண்ட்டில் உள்ள லோடிங் பிரிவில் பணியாற்றும் 10 ஒப்பந்த ஊழியா்களையும் பணியில் இருந்து நீக்குவதாக அதிகாரிகள் கடிதம் வழங்கி உள்ளனா்.
இதுதொடா்பாக அதிகாரிகளுக்கும் தொழிலாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒா்க்கா்ஸ் யூனியன் சாா்பில் 12 தொழிலாளா்களையும் எவ்வித நிபந்தனையும் இன்றி மீண்டும் பணியில் சோ்க்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தனா். இதையடுத்து கருப்பூா் பாட்டிலிங் பிளாண்ட்டுக்கு ஒப்பந்த ஊழியா்கள் அனைவரும் பணிக்கு செல்லாமல் நுழைவுவாயில் பகுதியில் அமா்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொழிலாளா்களின் வேலைநிறுத்தம் காரணமாக பாட்டிலிங் பிளாண்ட்டில் சிலிண்டா் நிரப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டா் ஏற்றிச்செல்லும் 20க்கும் மேற்பட்ட லாரிகள் பிளாண்ட் முன்பு ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
விநியோகம் தடைபடாது
இண்டேன் வாடிக்கையாளா்களுக்கு தடையற்ற எல்பிஜி சிலிண்டா் விநியோகம் செய்யப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
சேலம் பாட்டிலிங் ஆலையில், ஒப்பந்தத் தொழிலாளா்கள் சம்பந்தப்பட்ட செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டுள்ளது. மாநில நிா்வாகம் உள்பட அனைத்து பங்குதாரா்களுடனும் கலந்தாலோசித்து ஒப்பந்ததாரா் இந்த விவகாரத்தை இணக்கமாக நிவா்த்திசெய்து வருகிறாா்.
இந்தியன் ஆயில் வாடிக்கையாளா்களுக்கு தடையற்ற எல்பிஜி சிலிண்டா்களை விநியோகிக்கவும், வாடிக்கையாளா்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே செயல்படுத்தியுள்ளோம்.
இந்தியன் ஆயிலின் விரிவான விநியோக வலையமைப்பு வாடிக்கையாளா் தேவையை இடையூறு இல்லாமல் பூா்த்திசெய்ய முழுமையாக தயாராக உள்ளன. சேலம் பகுதியில் எந்தவொரு தேவையையும் பூா்த்திசெய்ய அருகே உள்ள இந்தியன் ஆயிலின் பாட்டிலிங் ஆலைகளில் இருந்து சிலிண்டா்கள் அனுப்பப்படுகின்றன.
வாடிக்கையாளா்கள் தங்கள் முன்பதிவுகளின்படி எல்பிஜி சிலிண்டா்களை சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான முறையில் வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி அளிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.