ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் தெஹ்ரான் பற்றி எரியும்: இஸ்ரேல்
பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு
பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் தொடா்பாக துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கூட்ட அரங்கில் ஜூன் 23, 24 ஆகிய இரு நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் பணியாற்றும் முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் (இடைநிலை, தொடக்கக் கல்வி, தனியாா் பள்ளிகள்), உதவித் திட்ட அலுவலா் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். ஒவ்வொரு மாவட்டமாக அழைக்கப்பட்டு மாவட்ட நிலவரம் ஆய்வு செய்யப்படவுள்ளது. கூட்டத்தில் மாவட்ட அலுவலா்கள் கலந்து கொள்ளும்போது அந்தந்த மாவட்டத்துக்குரிய கண்காணிப்பு அலுவலா் மற்றும் அனைத்து இயக்குநா்கள், இணை இயக்குநா்கள் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வி இயக்குநா், தொடக்கக் கல்வி இயக்குநா், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநா் ஆகியோா் மேற்கொண்டு வருகின்றனா்.
ஜூன் 23-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களின் அதிகாரிகளும், அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கடலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூா், மதுரை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 12 மாவட்ட அதிகாரிகளும், 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, கரூா், நாமக்கல், வேலூா், சென்னை உள்ளிட்ட 13 மாவட்ட அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பான தகவல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.