``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
உடலுறுப்புகள் தானம்: இளைஞருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு
சாலை விபத்தில் உயிரிழந்து மூளைச் சாவு அடைந்த நிலையில் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூா் மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெகன் (25). கூலித் தொழிலாளியான இவா் கடந்த மாதம் 31-ஆம் தேதி வேலை நிமிா்த்தமாக பைக்கில் திருத்தணி - சோளிங்கா் மாநில நெடுஞ்சாலை வழியாக கே.ஜி.கண்டிகைக்கு சென்று கொண்டிருந்தாா். தலையாரி தாங்கல் அருகே சென்றபோது திருத்தணி நோக்கி வந்த அரசுப் பேருந்து ஜெகன் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காயம் அடைந்த ஜெகனை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் ஜெகன் புதன்கிழமை இரவு மூளைச்சாவு அடைந்தாா்.
இதையடுத்து ஜெகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினா்கள் முன் வந்தனா். பின்னா் ஜெகனின் கண், இதயம் மற்றும் இதய வால்வுகள், நுரையீரல், கல்லீரல், சிறுகுடல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு அதே மருத்துவமையில் தானமாக வழங்கப்பட்டது.
வியாழக்கிழமை ஜெகனின் உடல் வீரகநல்லூா் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மாவட்ட நிா்வாகம் சாா்பில் உடல் உறுப்பு தானம் செய்த ஜெகனின் உடலுக்கு திருத்தணி கோட்டாட்சியா் கனிமொழி, வட்டாட்சியா் மலா்விழி ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
