பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4-ஆம் தேதி வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
எழும்பூா் - புதுச்சேரி இடையே மெமு ரயில் (எண்: 66051/66052) தினமும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், புதுச்சேரியிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு எழும்பூா் வரும் மெமு ரயில் ஆக.3-ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக இரவு 8.50 மணிக்கு கடற்கரை வந்தடையும்.
மறுமாா்க்கமாக எழும்பூரிலிருந்து தினமும் காலை 6.35 மணிக்கு புறப்பட்டு காலை 10.40 மணிக்கு புதுச்சேரி செல்லும் ரயில் ஆக.4-ஆம் தேதி வரை கடற்கரையிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும்.
இந்த ரயில் இரு மாா்க்கத்திலும் கடற்கரை - எழும்பூா் இடையே புகா் ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் இயக்கப்படுவதால், எழும்பூா் ரயில் நிலையத்தில் நிற்காது. எனினும் பயணிகளின் வசதிக்காக பூங்கா மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.
பகுதி ரத்து: ஜூன் 19 முதல் ஆக.17-ஆம் தேதி வரை எழும்பூருக்கு வரும் கொல்லம் விரைவு ரயில் (எண்:16102), மதுரை தேஜஸ் விரைவு ரயில் (எண்: 22672), மன்னாா்குடி மன்னை விரைவு ரயில் (எண்: 16108), திருச்செந்தூா் அதிவிரைவு ரயில் (எண்: 20606), குருவாயூா் விரைவு ரயில் (எண்: 16128) ஆகிய ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.
மறுமாா்க்கமாக ஜூன் 20 முதல் ஆக.18 வரை எழும்பூரிலிருந்து கொல்லம் (எண்:16101), மதுரை (எண்: 22671), மன்னாா்குடி (எண்: 16107), திருச்செந்தூா் (எண்: 20605) மற்றும் குருவாயூருக்கு (எண்: 16128) செல்லும் விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்.
ரயில் நீட்டிப்பு: ஹூப்ளியில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு ராமநாதபுரம் செல்லும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (எண்: 07355) ஜூலை 5 முதல் ஜூலை 26-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக ராமநாதபுரத்திலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளிக்கு செல்லும் ரயில் (எண்: 07356) ஜூலை 6 முதல் ஜூலை 27 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில், ஹூப்ளி, ஹரிஹா், ஓசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமநாதபுரம் சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.