பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
அயோத்தி ராம பாதையில் தடையை மீறி மதுக்கடைகள் -பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ஸ்ரீராமா் கோயிலுக்குச் செல்லக் கூடிய ராம பாதையில் தடையை மீறி மதுக்கடைகள் செயல்படுகின்றன; மாநில பாஜக அரசின் ஒத்துழைப்புடன் இந்தக் கடைகள் இயங்குவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடா்பாக, உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவா் அஜய் ராய், தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
கடவுள் ராமா் அவதரித்த தலமான அயோத்தி குறித்து உத்தர பிரதேச அரசு மற்றும் முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவிக்கும் தகவல்களும் கள நிலவரமும் வேறாக உள்ளது.
அயோத்திக்கு செல்லும் ராம பாதையின் 13 கி.மீ. சுற்றளவில் மது விற்பனைக்குத் தடை விதித்து, மாநகராட்சி செயற்குழு கடந்த மே 1-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், ராம பாதை மட்டுமன்றி ஸ்ரீராம ஜென்ம பூமியின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
மாநில அரசின் ஒத்துழைப்புடன் இக்கடைகள் செயல்படுகின்றன. வருமானத்துக்காக மதுக்கடைகளைத் திறக்க மாநில அரசு அனுமதித்துள்ளது. இது, புண்ணிய நகரான அயோத்திக்கு அவமதிப்பகும்.
ராம பாதை அருகே மதுக்கடைகள் அனுமதிக்கப்பட்டது ஏன்?, இந்தக் கடைகள் அரசிடம் எவ்வாறு ஒப்புதல் பெற்றன?, உரிமங்கள் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்களில் உயிரிழந்தோா் எண்ணிக்கையை மாநில அரசு குறைத்துக் காட்டுவதாக பிபிசி செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் 37 போ் உயிரிழந்ததாக மாநில அரசு உறுதி செய்த நிலையில், 82 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில், மாநிலத்துக்கும் நாட்டுக்கும் முதல்வா் யோகி ஆதித்யநாத் பொய் கூறுவது தெளிவாகியுள்ளது. இதுதான், பாஜகவின் உண்மை முகம் என்றாா் அஜய் ராய்.