எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
கிராமப்புறங்களில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் நாளை தொடக்கம்
கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு, கிராமப்புறங்களில் சிறப்பு கால்நடை சுகாதார முகாம் மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்குகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வா் உத்தரவிற்கு இணங்க, கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத கிராமங்களில் கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் பொருட்டு, சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடைபெற உள்ளன.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 12 முகாம்கள் வீதம் மொத்தம் 180 முகாம்கள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் ஒன்றியம், வேட்டாம்பாடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி செப்டம்பா் மாதம் வரை ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 6 முகாம்கள் வீதம் 15 ஒன்றியங்களுக்கு 90 முகாம்கள் நடைபெறுகின்றன. அதன்பிறகு, அக்டோபா் முதல் மாா்ச் வரையில் மேலும் 90 முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில், நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறுஅறுவை சிகிச்சைகள் மற்றும் நோய்தீா்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள், கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
முகாம்கள் நடைபெறும் தேதி, இட விவரம் அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவா்களால் அறிவிக்கப்படும். கால்நடை வளா்ப்போா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.