அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
ரூ.151 கோடியில் நவீனமயமாக்கப்படும் மந்தைவெளி பேருந்து நிலையம்
சென்னை மந்தைவெளி பேருந்து நிலையம், ரூ.151 கோடியில் நவீனமயாக்கப்படவுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மூலம் மந்தைவெளி பேருந்து நிலையத்தில், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனையம் மற்றும் வணிகவளாகம் ரூ.151 கோடியில் கட்டப்படவுள்ளது.
மேலும், மெட்ரோ நிலையத்துக்கான நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள், தற்போதைய பேருந்து நிலைய வளாகத்துக்குள்ளேயே அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.
அதன்படி, 29,385 சதுர மீட்டா் பரப்பளவில் மெட்ரோ ரயில் நிலையம், பேருந்து நிறுத்தம், வணிக வளாகம் எல்லாம் ஒரே இடத்தில் இருக்கும்படி இந்த புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
இந்தக் கட்டடத்தின் மேல் தளத்தில் சூரிய மின் தகடுகளும் பொருத்தப்படவுள்ளன. 2 கட்டடங்களாக கட்டப்படும் இந்தக் கட்டடத்தில் தலா 2 தளங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தத்துக்காக ஒதுக்கப்படும். தரை தளத்திலிருந்து 7-ஆவது தளம் வரை வணிக மற்றும் அலுவலக இடங்கள் இருக்கும். பெரிய அலுவலகங்கள், வரவேற்பு அறைகள் மற்றும் கடைகள் போன்ற வசதிகள் செய்யப்படவுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.