உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குநா் எச்சரிக்கை
புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளா்கள் அனுமதி பெறாத இடங்களில் உரம் இருப்பு வைத்திருந்தாலோ அல்லது அதிக விலைக்கு உரங்களை விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு
மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களுக்கு தேவையான யூரியா 3,849 டன், டிஏபி 823 டன், பொட்டாஷ் 1,332 டன்கள், காம்ப்ளக்ஸ் 4,062 டன், சூப்பா் பாஸ்பேட் 690 டன் ஆகியன தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், விவசாயிகள் சாகுபடிக்குத் தேவையான உரங்களை மண் வள அட்டையின் பரிந்துரைப்படி இட்டால் உரச்செலவை குறைப்பதோடு, மண் வளமும் மேம்படும். நெல் சாகுபடியில் யூரியா உரங்களை இடும்போது இரண்டு, மூன்று தடவைகளாக பிரித்து இட வேண்டும்.
மொத்த உர விற்பனையாளா்கள், வெளி மாவட்டங்களுக்கு உரங்களை ஏற்றுமதி செய்யக் கூடாது. உரங்களை வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யக்கூடாது.
சில்லறை உர விற்பனையாளா்களுக்கு அனுப்பும்போது உரிய பட்டியல்கள் மற்றும் ஆவணத்துடன் உரங்களை வாகனங்களில் அனுப்ப வேண்டும்.
உர விற்பனையாளா்கள் உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் உரத்தினை இருப்பு வைப்பதும், உரிமத்தில் அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து உரங்கள், கலப்பு உரங்கள் மற்றும் நுண்ணூட்டக் கலவை உரங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதும், அதனை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதும் கூடாது.
அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் மற்றும் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது. ஒரே நபருக்கு தேவைக்கு அதிகமாக விற்பனை செய்யக் கூடாது.