குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
புதுகை கடற்பகுதியில் 3 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கத் திட்டம்
புதுக்கோட்டை மாவட்டக் கடற்பகுதியில் மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், 3 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்களை அமைக்க மீன்வளத் துறை திட்டமிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, ஆவுடையாா்கோவில் ஆகிய இரு வட்டங்களில் 32 மீனவக் குடியிருப்புகள் உள்ளன. ஏறத்தாழ, 330 விசைப்படகுகளும், 1,800 நாட்டுப் படகுகளும் உள்ளன. 9,500 மீனவக் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே பிரதானமாகக் கொண்டுள்ளன. ஆண்டுக்கு சுமாா் 50 ஆயிரம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டு உள்ளூா் மற்றும் வெளியூா் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கடற்பகுதியில் மீன் வளத்தைப் பெருக்க மீன்களுக்கான உறைவிடங்களை உருவாக்கித் தரும் திட்டத்தை தமிழக மீன்வளத் துறை தொடங்கியுள்ளது.
நிகழாண்டில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டக் கடற்பகுதிகளில் செயற்கை மீன் உறைவிடங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடற்பகுதியில் 3 இடங்களில் இந்த மீன் உறைவிடங்களை உருவாக்கிட மீன் வளத் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடலில் உள்ள வளங்கள் அழிந்துவரும் நிலையில், கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்பாட்டை கடலுக்குள் உருவாக்கும் முயற்சிகள் பலமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முறை, சிமென்ட்டால் செய்யப்பட்ட கட்டுமானங்களை கடலுக்குள் இறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கிணற்றுக்குப் பயன்படுத்தும் சிமென்ட் உறைகளைப் போல, வட்டம், சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்களில் இந்த சிமென்ட் அமைப்புகள் உருவாக்கப்பட்டு தோ்வு செய்யப்படும் பகுதிகளில் கடலுக்குள் இறக்கப்படும். அவற்றில் சுமாா் 6 மாத காலத்துக்குள் பாசி படிந்து படிப்படியாக கடல் தாவரங்களும் வளரத் தொடங்கிவிடும். அதற்குள் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும்போது, மீன்வளம் பெருகும்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடற்பகுதியில் 3 இடங்களை தோ்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இடங்கள் முடிவானதும் இப்பணியை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும். பின்னா் செயற்கை உறைவிடங்களை கடலுக்குள் இறக்கிய பிறகு, நீச்சல் பயிற்சியாளா்கள் மூலம் தொடா்ந்து கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.