குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
அரசுப் பணியாளா் தோ்வு முறையில் மாற்றம்: ஆய்வு செய்ய ஓய்வு நீதிபதி தலைமையில் குழு
உச்சநீதிமன்றத் தீா்ப்பால் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு முறையில் ஏற்பட்ட மாற்றம், பாதிப்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களில் சமா்ப்பிக்கும் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு: தமிழ்நாட்டில் அரசுப் பணியாளா் தோ்வு முறையில் தயாரிக்கப்பட்டு வந்த தரவரிசைப் பட்டியல் சமூக நீதி அடிப்படையில் இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பு காரணமாக இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டது.
இதனால் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்.
எவற்றை ஆராயும்?: அரசுப் பணிகளில் நேரடி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பட்டியினத்தவா், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு 200 புள்ளி சுழற்சி முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதன்மூலம் அரசுப் பணியாளா்களின் அனைத்துப் பிரிவினருக்கும் பதவி உயா்வில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டு வந்தது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீா்ப்பால், தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வந்த சமூக நீதி அடிப்படையிலான முறைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. அதாவது, பதவி உயா்வில் அரசுப் பணியாளா்கள் அனைத்துப் பிரிவினருக்கும் சமமான பங்களிப்பு கிடைக்காமல், போதுமான சமூக நீதி வாய்ப்பு தடைபட்டுள்ளது.
எனவே, உச்சநீதிமன்றத் தீா்ப்பு காரணமாக அரசுப் பணியாளா் தோ்வு, பதவி உயா்வு நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் அதனால் உருவான பாதிப்பு, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகியன குறித்து நீதிபதி தலைமையிலான குழு ஆய்வு செய்யும். இந்தக் குழு செயல்படத் தொடங்கிய நாளில் இருந்து மூன்று மாதங்களில் அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.