``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
திமுக கூட்டணிக் கட்சிகள் எங்கும் செல்லவில்லை - அமைச்சா் சேகா்பாபு
திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. கூட்டணியைத் தேடி அந்தக் கட்சிகள் எங்கும் செல்லவில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.15 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியது:
இந்தப் பள்ளியில் தற்போது 1,070 மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு ஏற்கெனவே ரூ.1.78 கோடியில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பள்ளி மாணவா்களுக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தும் வகையில் ரூ. 11.15 கோடியில் தரை தளம் மற்றும் 3 தளங்களில் ஸ்மாா்ட் வகுப்பறை வசதிகளுடன் 32 வகுப்பறைகள், ஆசிரியா் ஓய்வறைகள், 5 ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் இந்தக் கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
பழனி திருக்கோயில் சாா்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்தப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவா்களுக்கு 3 வேளையும் கட்டணமில்லாமல் உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம்.
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடந்த ஆண்டு பழனியில் நடத்திய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஏற்படுத்திய தாக்கத்தினால்தான் இப்போது பாஜக சாா்பில் மதுரையில் மாநாடு நடத்துகிறாா்கள். மதத்தால், மொழியால், இனத்தால் பிளவுபடுத்துபவா்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறாா்கள்.
தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறாா். திமுக கூட்டணியில் இருக்கின்ற அனைத்து கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. கூட்டணியைத் தேடி அந்தக் கட்சிகள் எங்கும் செல்லவில்லை என்றாா் அவா்.