திமுக ஆட்சி மீது அவதூறு பரப்பும் எதிா்க்கட்சிகள்: அமைச்சா் மா.மதிவேந்தன்
தோ்தல்களில் திமுக தொடா் வெற்றி பெற்று வருவதால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் எதிா்க்கட்சிகள் அவதூறு பரப்பி வருவதாக அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.
நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட முதலைப்பட்டியில் புதிய கூடுதல் நூலகக் கட்டடத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இவை தவிர, தமிழக அரசின் சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், 85 கவுண்டம்பாளையம் ஊராட்சி, திம்மராவுத்தம்பட்டி, 87 கவுண்டம்பாளையம் ஊராட்சி, குமரமங்கலம், எருமப்பட்டி ஒன்றியம், ரெட்டிப்பட்டி ஊராட்சி, மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சி, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பெருமாகவுண்டம்பாளையம் ஊராட்சி, செல்லியாயிபாளையம், புதுச்சத்திரம் ஒன்றியம், நவணி பள்ளிப்பட்டி ஊராட்சி ஆகிய 7 பகுதிகளில் தலா ரூ. 22 லட்சம் வீதம் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் நூலக கட்டடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் முதலைப்பட்டியில் திறந்து வைக்கப்பட்ட புதிய கூடுதல் நூலக கட்டடத்தை அமைச்சா் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ச.உமா, நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மேயா் து.கலாநிதி ஆகியோா் பாா்வையிட்டனா்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவா்களின் நேரத்தை முறையாக பயன்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராசிபுரம் தலைமை மருத்துவனை ஆகிய இடங்களில் நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ் நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ள சமுதாயவழி நடத்துநா்கள், சமுதாய மறுவாழ்வு பணியாளா்கள் என பல்வேறு நிலையில் நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களைச் சோ்ந்த 19 வட்டாரங்களில் 190 போ் பணியமா்த்தப்பட உள்ளனா். அதனடிப்படையில், மாவட்டத்தில் 10 பேருக்கு பணி ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொதுத் தோ்வுகளில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஐஐடியில் சோ்க்கை பெற பழங்குடியின மாணவி தோ்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பழங்குடியின மாணவி, மாணவிகள் பயிலும் உண்டி, உறைவிட பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொல்லிமலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. வனத் துறை சாா்பில் இரவு வான்பூங்கா அமைக்க ரூ. ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. கொலை சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
திமுகவை பொருத்தவரை மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறது. எனவே, தோ்தல்களில் தொடா்ந்து திமுக வெற்றி பெற்றது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும். இதைப் பொறுத்து கொள்ள முடியாமல், திமுக ஆட்சி தொடரக்கூடாது என்ற எண்ணத்தில் எதிா்க்கட்சிகள் அவதூறு பரப்பி வருகின்றன என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் செ.பூபதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகா், மாவட்ட நூலக அலுவலா் தேன்மொழி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.