தற்பெருமை அதிகம், சாதனைகள் குறைவு: அமித் ஷா மீது காங்கிரஸ் விமா்சனம்
புது தில்லி: இந்தியாவில் இதுவரை அமித் ஷாவை போல வேறெந்த எந்தவொரு மத்திய உள்துறை அமைச்சரின் பதவிக் காலத்திலும் தற்பெருமை பேச்சு அதிகமாகவும், சாதனைகள் குறைவாகவும் இருந்ததில்லை என்று காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை விமா்சித்தது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘11 ஆண்டுகால மோடி ஆட்சி பொதுச் சேவைக்கான பொற்காலமாகும். நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் முடிவுக்குவரும் தருணத்தில் உள்ளது. ஜம்மு-காஷ்மீா் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.
இதற்குப் பதிலடி அளித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: ஜம்மு-காஷ்மீா் மற்றும் மணிப்பூரில் அமைதி ஏற்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தது மிகவும் விசித்திரமாக உள்ளது. இது தனது பெரும் தோல்விகளில் இருந்து பிறரின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகும்.
கடந்த ஏப்ரலில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மணிப்பூா் தொடா்ந்து பற்றி எரிகிறது. அங்கு மிகத் தாமதமாக குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது துயரம் மிகுந்த தோல்வியாகும். இந்தியாவில் இதுவரை அமித் ஷாவை போல வேறு எந்தவொரு மத்திய உள்துறை அமைச்சரின் பதவிக் காலத்திலும் தற்பெருமை பேச்சு அதிகமாகவும், சாதனைகள் குறைவாகவும் இருந்ததில்லை எனத் தெரிவித்துள்ளாா்.
டிரம்ப்பிடம் பிரதமா் பேச வேண்டும்: அமெரிக்காவின் நியூயாா்க் விமான நிலையத்தில் இந்திய மாணவா் ஒருவரை நாடு கடத்தும் முன், அவருக்கு கை விலங்கிட்டு, தரையில் வலுக்கட்டாயமாக குப்புற படுக்கவைத்து மிருகத்தை பிடிப்பது போல அந்நாட்டு அதிகாரிகள் நடந்துகொண்ட காணொலி இணையத்தில் வெளியானது.
இதுதொடா்பாக ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவில் இந்தியா்கள் அநாகரிகமாக நடத்தப்படுவது குறித்தும், அவா்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடா்பாகவும் அந்நாட்டு அதிபா் டிரம்ப்பிடம் பிரதமா் மோடி பேச வேண்டும். இந்தியா்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்க வேண்டியது பிரதமா் மோடியின் தலையாய கடமை’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.